17.5.10

புதியதளம்

எனது பதிவு தள பெயரை மாற்றியுள்ளேன். தொடர்ந்து எனது பதிவுகளை வாசிக்க கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பை பயன்படுத்தியோ அல்லது நேரடியாக தளப்பெயரை தட்டச்சு செய்தோ எனது தளத்திற்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். நன்றி.

http://theethumnanrum.blogspot.com/

***********************************************************************************

5.5.10

அற்றவை நிரம்பிய தேகம்

கற்றவை கரையும் கானுறை ஞானம்
சற்றவை மறைய களிபெறும் மோனம்
மற்றவை தேடிடா மதிவானின் போதம்
அற்றவை நிறைந்திட்ட அந்தியின் நாதம்

முற்றவை விலகிடா முற்றத்து வானம்
சிற்றவை அடங்கிடா கருமுகிழ் தானம்
கூற்றவை முற்றிடா குறுந்தமிழ் பானம்
கொற்றவை என்றொரு காடேகும் மௌனம் - திக்

கற்றவை நிரம்பிய விசும்பிடை வாசம்
பெற்றவை யாவிலும் தண்பனி வீசும்
உற்றவை பற்றிய ஊனுயிர் தாகம் - அமிழ்து
மற்றவை நிரம்பிய கலயமுன் தேகம்.

*******************

1.5.10

சித்திரைப் பௌர்ணமி




சித்திரைப் பௌர்ணமி. இம்மாதம் எனது மொபைல் கேமராவில் எடுத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரையில் பௌர்ணமியை பார்ப்பது எனக்கு பிரார்த்தனை. இம்முறை கடுமையான வேலைப்பளுவுன் இடையில் கிடைத்த நேரத்தில் எடுத்தது. இடம் திருச்சி பொன்மலை அருகில்.
இந்த படம் தொடர்பாகவும் கவிதை எழுத நண்பர்களை அழைக்கிறேன்.
...................................

ஒளிரும் மரம்

கால்பரீட்சை ஒரு பாவச்செயல்.
அரைப்பரீட்சை ஒரு பெருங்குற்றம்.
முழுப்பரீச்சை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
.

மாணவர்களின் கற்பனைக்கு ஒரு தலைவணக்கம். இதை ஒரு மாணவனின் தமிழ் புத்தகத்தில் பார்த்தேன்! தீண்டாமை என்னும் வார்த்தயை பென்சிலால் அழித்து மேலே எழுதியிருக்கிறான். பார்த்தது நாலைந்து வருடமிருக்கும். முதல் தடவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பும் சிரிப்பும் இன்னும் மாறவில்லை. ஒரு அசட்டு சிரிப்பும் வெட்கமுமாய் அந்த புத்தகத்தை வாங்கி பைக்குள் திணித்துக்கொண்டான் அந்த ஆறாவது வகுப்புக்கு போகப்போகும் மாணவன். இந்த வருடமும் பரிட்சை முடிந்து கோடை விடுமுறையை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் மாணவக்கண்மணிகள். என்னனென்ன செய்வார்கள் என்று பார்த்தால் பெரும் பரிதாபமே மிஞ்சுகிறது. அவர்களின் அறுபது சதநேரத்தை தொலைகாட்சி கொன்றுவிடும். முட்டாள்தனத்தின் உச்சமான சம்மர் கோச்சிங் சில பல நூறுகளைக் கொல்லும். எல்லோருக்கும் வாய்க்காது இன்பச்சுற்றுலா. உறவினர் வீட்டுக்கோ கிராமத்து சூழலுக்கோ செல்லும் பழக்கம் அருகி விட்டது. என் பையன்கள் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது போரடிக்குது என்கிற வார்த்தையை பிரயோகிக்கிறார்கள். மனம் பயந்து தவிக்கிறது. அவர்கள் விரும்பும் ஒவ்வொரு பொழுதுபோக்கு முறையும் பெரும் செலவின வகைகளாய் இருக்கிறது. மக்கள் அவற்றைப்பற்றி பெரிதாக அக்கறைப்படவும் செய்வதில்லை. செலவு குறைவான உருப்படியான பொழுதுபோக்குகளை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள். குழந்தைகளின் வயதுக்கு தக்கவாறு. நான் பரிதுரைக்கும் ஒரே பொழுதுபோக்கு நம் தொன்மைக்கதைகளை சொல்லியும் நடித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குவதும். நடனம் நல்லதுதான். ஆனால் சினிமா பாடல்களுக்கு அல்ல.


******************
இடிமின்னல்களுடன் கலைகட்டுகிறது கோடைமழை. இப்படி வெயிலில் பெய்யும் மழைக்கு காத்திரமான மண்வாசனையுண்டு. மேலும் இதன் மாலை நேர மேகம் அற்புதத்திலும் அற்புதமானவை. அநேக நேரங்களில் வெள்ளிச்சாம்பல் வண்ணத்தில் மின்னிப்பரவும். அதன் பின்புலத்தில் வெட்டும் மின்னல் நமக்கு கடவுளை காட்டும் அளவு வெளிச்சம் அளிக்கும். நின்று பெய்யும் மழையும் அதன் சத்தமும் மாலை மின்னலும் நம் பால்யத்தின் மிக நுணுக்கமான சுருள்களை விரிக்க வல்லவை.

*****************************

மின்மினிப்பூச்சிகளின் ஒளி திரவத்தை மரங்களில் செலுத்துவதின் மூலம் ஒளிரும் மரங்களை உருவாக்கலாம் என்றும் தெருவிளக்கு கம்பங்களை அகற்றி தெருவிளக்கு மரங்கள் ஏற்படுத்தலாமென்கிற சாத்தியப்பாடுகளை திட்ட வரைவில் நிரூபித்த திருச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தெருவெல்லாம் ஒளிரும் மரம் என்கிற அற்புத படிமத்தை கவிதையாக்க சிவகுமாரை அழைக்கிறேன். குட்டையாய் இல்லாமல் நீண்ட கவிதையாய் வந்தால் நன்று. மற்றவர்களும் முயலலாம்.

***********************

26.4.10

படத்தொகுப்பு


பத்து படங்கள் என்றால் எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை. எனவே நான் எனது சினிமா காலத்தை மூன்றாக பிரிக்கிறேன்.

எனது மிக அழகான கிராமமான வடபுதுப்பட்டி தேனி மாவட்டம் மேற்குமலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இன்று அதன் மொத்த அடையாளமும் நகரிய நசுக்களால் அழிந்து போனாலும் எனது மூளையில் அதன் பழைய வரைபடங்கள் எனக்கு பொங்குமின்ப நினைவலைகளை உருவாக்குபவை. அந்த ஊரில் எனக்கு திரைப்படம் பார்க்க கிடைத்த அரங்கம் மூன்று. சரஸ்வதி, வீரக்குமார், ஆர்த்தி. முதல் சரஸ்வதியின் முதலாளி யாரென ஞாபகம் இல்லை. மற்ற இரண்டுக்கும் முத்து நாயக்கன் முதலாளி. சரஸ்வதியை இழுத்து மூடிய பின் வீரகுமார் வந்தது. வீரக்குமார் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆர்த்தி ஆனது. ஆக ஏக காலத்தில் எங்கள் ஊரில் ஒரே டூரிங் டாக்கீஸ் தான். இவை அனைத்தும் தொண்ணூறுகளில் முடிவுக்கு வந்தன. இப்போது வடபுதுபடியில் திரையரங்கு இல்லை. பக்கத்து டவுன் தேனியிலோ வடக்கில் பெரியகுளத்திலோ பொய் படம் பார்க்க வேண்டும். போதும் தம்பட்டம். இனி படங்களின் பெயர் தொகுப்புகள்.

புரட்சிதலைவனின் இரண்டு படங்களை சொல்லி தொடங்கலாம். மலைக்கள்ளன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன். பொய்முடி இல்லாத அழகு தல புரட்சித்தல. சிவாஜியின் ராஜா மற்றும் கௌரவம். ஜெமினியின் வாழ்க்கைபடகு, வல்லவனுக்கு வல்லவன் - ஜெமினி வில்லனாக வருவார்! உத்தரவின்றி உள்ளே வாவும் சட்டம் என் கையில் எனும் படமும் நினைவில் இருக்கிறது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமனியும் ஜெகன்மொகினியும் மறக்க ஏலாதவை. மிகவும் ரசித்துப்பார்த்த எம் ஜி ஆர் படம் ஒன்று எவ்வளவு யோசித்தாலும் பெயர் வரவில்லை. அதில் வரும் வில்லன் ஒரு பின் நவ்வீனத்துவ திருடனாய் நடிப்பார். இதில் இறுதியாக வீரக்குமாரின் முதல் நாள் படமான வருவான் வடிவேலன்!

இரண்டாவது கட்டமாக சில படங்கள்: கண்களை பொத்திக்கொண்டே முழுப்படத்தையும் பார்த்தேன்.. இல்லை கேட்டேன் - நூறாவது நாள்! அதில் வரும் உருகுதே இதயமே என்கிற பாடலை நீண்ட நாட்களாய் கேட்கப்பயந்து கொண்டிருந்தேன். மூன்று முடிச்சு - க்யூட் ஸ்ரீதேவி, தாமரைநெஞ்சம்-சரோஜாதேவி, டிக் டிக் டிக், இன்று போய் நாளை வா, இணைந்த கைகள், சிவப்புமல்லி, ஒருதலை ராகம், அவள் அப்படித்தான், முள்ளும் மலரும்.

மூன்றாவது பாகம்: முதல் மரியாதை, காதலுக்கு மரியாதை, தேவர்மகன், பாட்ஷா, வாலி, கேளடி கண்மணி, புலன் விசாரணை, காதல், எங்க சின்ன ராசா
கடைசியாக நான் பாடும் பாடல்.

ஒரு வழியா எழுதிட்டேன். இவை எல்லாம் இப்போ பிடித்த படங்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஆனால் இப்படங்களைப் பார்த்த நாட்களில் இவை எனக்கு மிகுந்த மன சிலாக்கியத்தை உண்டு பண்ணியவை.
எல்லாவற்றையும் தாண்டி எனக்கு ஒரு சிறப்பு படம் உண்டு அது எந்த பட்டியலிலும் இணைக்க முடியாதது - ரத்தக் கண்ணீர்.

போதுமா பத்மா!
*****************************

24.4.10

kepela

நல்ல வெயில். மயிலாய் இருப்பதில் எவ்வளவு பெரிய சிரமம் என்பது இவ்வளவு நீண்ட தோகையை தூக்கி சுமப்பவனுக்குத்தான் தெரியும். களிமண் தரை கெட்டிப்பட்டு பாலம் பாலமாய் பிளவுபட்டு ஒரே வெக்கைப்பரவல். அகவினால் தொண்டை எரிகிறது. நீருக்கும் வழியில்லை என்றில்லை. உப்புக்காற்று உணர்கிறேன். எங்கோ பக்கத்தில் கடலிருக்கிறது. நீரை எவ்வளுவுதான் குடிப்பது. பசி அடங்க மாட்டேன் என்கிறது. ஒரு மண்புழுவை பிடிக்க ஒன்றரை அடி பறிக்க வேண்டியிருக்கிறது. ஒரு விரல் நகம் வேறு ஒடிந்து லேசான குருதி கசிவு. இப்போது தேவை ஒரு எலி. ஒரு இளம் பாம்பென்றால் கோடி புண்ணியம். அடிக்கிற வெயிலுக்கு கருவேல மரத்துக்குள் நுழைந்தால் குத்தும் முள் கடும் எரிச்சல். எல்லாம் அந்த கலாபத்தால் வந்தது. வாலில்லாமல் அதுகள் தான் எவ்வளவு இலகுவாக ஓடித்திரிகிறது. இதுகளை தொகை விரித்து அழகு காட்டி சரி செய்வதற்குள் தீர்ந்துவிடும் போங்கள். அந்த நேரத்தில் பசி வேறு தெரிந்து தொலையமாட்டேன் என்கிறது. இதுதான் சூழல். இனி நடப்பவைதான் என்னை பைத்தியமாகிவிட்டது. பாருங்கள் கருவேலன்கிளையில் சட்டையை உரித்துக்கொண்டிருந்ததுதான் முதலில் தெரிந்தது. இளஞ்சாரை. கொழுப்பு. கோடி புண்ணியம்தான். அதே நேரம் ஒரு வெள்ளெலி புதருக்குள் நுழைகிறது. இரட்டை மாங்காய் என்றால் இதுதானோ. இரண்டு கோடிப் புண்ணியம். வாயில் சாரை. காலில் எலி. பசித்தவனுக்கு எதற்கு பாவ புண்ணியம். அந்த கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்லி தொலையவேண்டும். வந்தது வினை. எதற்கு எங்கள் இரண்டு பேரையும் உண்ண வேண்டும் என்கிற குரல் எலியா பாம்பா. இரண்டையும் தரையில் இறக்கினேன். உரையாடல் தொடங்கிற்று.

எலி: ஏன் எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் உண்ணவேண்டும்.
பாம்பு: அதானே.
நான்: பசி. வேறென்ன செய்ய.
எலி: எனக்கும் கூடத்தான் பசி. சில தானியமணிகளை தேடத்தான் வெளியே வந்தேன்.
பாம்பு: இஸ் இட்? உனக்கு பசிக்குமா என்ன? நீ நான் உண்ணும் தின்பண்டமாயிற்றே. உன்னை பார்த்துவிட்டுத்தான் பாதி சட்டையைக்கூட கழற்றாமல் கீழிறங்கினேன். அதற்குள் மயிலார் கவ்வி விட்டார்.
எலி முறைத்தது.
எலி: நானும் உயிர் கொண்டு அலைபவள்தான். எனக்கும் பசிக்கும். உன்னை விட அதிகமாக. எதையாவது விழுங்கவில்லை என்றால் கூட நாங்கள் எதையாவது கடித்துக்கொண்டிருப்போம்.
நான்: ஒ.. நீ பெண்.
எலி: பெண் என்றால் இளக்காரமா. பெண்தான் எலிஎன்றாலும்.
பாம்பு: இவள் உடம்புக்கு ஆடையுடுத்தி மறைத்தலையும் ஜந்துக்களை போல பேசுகிறாள். பசிக்காக அனைத்தையும் உண்ணும் கழிசடைகள். I never like'em.. you know.
நான்: நீ எங்கிருந்து வருகிறாய் சாரை. ஆங்கிலம் எல்லாம் தூக்குதே. சரி அது எதுக்கு எனக்கு. எனக்கு பசி.. உன் சட்டையை முழுதாக கழற்றித்தொலை.. உன் கொழுப்பு என்னை கொஞ்சம் சாந்தப்படுத்தும்.
எலி: என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.
நான்: பெண் என்பதால் உன்னை கொத்திக்குதறாமல் ஒரே விழுங்கு.. சரிதானே.
பாம்பு: அவள் என்ன கேட்டாள். நீ என்ன சொல்கிறாய்.
நான்: என்னை ஒருமையில் அழைக்காதே சாரை. என் பொறுமை கரையத்தொடங்கி விட்டது.
எலி: இதோ பார். நீ எங்களை இறக்கி விட்டதும் ஓடியிருந்தால் உன்னால் எங்களை பிடித்து இருக்கமுடியாது. காட் ப்ராமிஸ்.. நாங்கள் நிற்கிறோம் என்றால் எங்கள் நேர்மையை நீ கவனி. சொல்வதைக்கேள். எங்கள் இரண்டு பேரில் ஒருவரை விட்டு விடு.
எனக்குத்தான் எத்தனைத் தொல்லை. பசித்தால் திங்க வேண்டும். அதைவிட்டு விட்டு. இப்பொழுது என் அறத்தை பற்றிய கேள்வி எழுப்பி நொம்பலப்படுத்துதுகள். இதற்கு பேசாமல் அந்த கலாபத்தை தின்னு தொலைத்திருக்கலாம். பசி வேறு கண்ணைக்கட்டிக் கொண்டு வருகிறது. நான் ஒரு மயில். எலியையோ பாம்பையோ தின்றால் என்ன பிரச்சனை. இதை இரண்டையும் ஒரே நேரத்தில் உண்டால் யாருக்குத்தான் என்ன பிரச்சனை. சனியன் வேறு யாராவது கேட்டால் பதில் சொல்லலாம். இதுகளே வந்து கேட்டால். நரன் வடிவேலுவின் கதைபோல ஆகிப்போனதே பிழைப்பு.
எலி: என்ன மயிலாரே பலமான யோசனை. ஒரு முடிவுக்கு வாரும் சீக்கிரம். எனக்கு பசி.. பாருங்கள் உங்கள் நகங்களை திங்கத்தொடங்கிவிட்டேன். என் சைசுக்கு நீங்கள் கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் மாரிக்காலம் வரை தாங்கும்.

என் விரல் நகங்களை பார்க்க குனிந்த சைக்கிள் கேப்பில் பாம்பார் எலியை லவட்டி விட்டார். எலிவால் துருத்திய வாயை அதக்கியவாறு life is very short for lies என்றார் பாம்பார். நான் அவரை இரண்டு கால்களிலும் வாகாக பிடித்துக்கொண்டு கொத்தி கொத்தி தின்னத்தொடங்கினேன். அதன் தலைப் பகுதியில் எப்பொழுதும் போல காதுகளை காணவில்லை. அதன் கண்களைக் கொத்துவதற்கு முன் அவற்றைப் பார்த்து சொன்னேன் vengence is lazy form of grief.
பாம்பாரின் கழுத்துக்கீழ் நெளிந்து கொண்டிருந்த எலியார் விழுந்த ஓட்டை வழி தவ்வி குதித்தோடினார் களிமண் தரையில் புழுதி பறக்க kepéla என்று கத்தியவாறு. நான் பசியாறினேன். இன்னொரு நாளைக்கு எலி சிக்காமலா போய்விடும்.

**************


kepéla. - lt means standing on opposite sides of the river."
this story is dedicated to nicole kidman.

***********************

இருப்பு என்கிற வெற்றிடம்


கவனப்பிசகொன்றை தூண்டிலில்
மாட்டி நீருள் எறிகிறான்
ஆழத்தில் அமிழும் வளையூசியில்
சிக்கிய மணல் துகளுடன்
மீண்டெழும் தூண்டிலை தரையிருத்தி
மணலுடன் வீடேகும் அவனது வாணலி
கொதிப்படைய சமைத்துண்கிறான்
ஒரு துளி பசியை பின்னான பசியற்ற
பொழுதில் துளையடைத்த ஈய
வாளியுடன் செல்கிறான்
நீர் நோக்கி மீண்டும்
இம்முறை அவனது வெற்றிடம்
நிரம்புகிறது
ஒளியூடாடும் உடலிலி மீன்கள்.
********************

19.4.10

மன்னிக்கவும்

விருப்பமான விருப்பமான பெண்கள் : முட்டுவேன் கொல் என்று ஊரைப்பார்த்து கதறிய அவ்வையார். சென்றுவா மகனே என்று பாடி களித்தீர்த்த சுந்தராம்பாள். உறுதி குழையாத அன்பின் - ஆங் ஸான் ஷுகி(Aung San Suu Kyi). வலியின் ஓவியை பிரைடா காலா. வலியின் கவிஞை சில்வியா ப்ளாத். தமிழ் திரை இசை பாடலாசிரியர் தாமரை. ஆளுமை அருந்ததி ராய். அழகி நந்திதா தாஸ். பேரழகி ஜமுனா. பெரும்பேரழகி சல்மா ஹயக்.

இது பிரபலமானவர்களில் எனக்குப்பிடித்த பெண்கள். எனக்குவிருப்பமான சுற்றமும் நட்பும் பற்றி நான் குறிப்பிடப்போவதில்லை.

***************************

கண் போன போக்கிலே கால் போகலாமா

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன்.....மனிதன்.... மனிதம்..............மனிதா...மனி.. மனி... மனி...



மன்னிக்கவும் ரெகார்ட் கீறல் விழுந்துள்ளதால் இந்த வரியே திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கிறது. சவுண்ட் சர்விஸ் பார்ட்டி ப்ளேயரைப் போட்டுவிட்டு விட்டு ரெண்டு இட்லி கெட்டிச் சட்டினி வைத்து சாப்பிட்டு வருவதாக சொல்லி போயிருக்கிறான்.

பொறுத்திருங்கள்.

****************************
எவ்வளவு எமாற்றுகாரர்களாய் இருக்கிறார்கள் இந்த சினிமா இயக்குனர்கள் என்பதற்கு மறுபடியும் ஒரு அத்தாச்சி 'பையா'. கொஞ்ச நாளுக்கு முன்ன 'படிக்காதவன்' என்கிற ரஜினியின் மருமான் நடிச்ச படத்த ரீ- மேக்கியிருக்கார் திருவாளர் லிங்குசாமி. அதுலயும் இந்த தமன்னா பொண்ணுதான் .... ஹையோ.. ஹையோ.
******************

நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை:

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

நீங்க சொன்னா சரிதானுங்க மாமோவ்வ்...........

**********************************

16.4.10

கதை


நான் யாருக்கும் பின்னூட்டம் அளிக்கவில்லைஎன்றால் யாரும் எனக்கு பின்னூட்டம் செய்யமாட்டார்கள் என்று சொல்கிறார் நேசமிதிரன். நல்லது. இன்று எனக்கு அதிகபட்ச சொடுக்காக என்பது உள்ளது. எனக்கு தெரிந்த ஐந்து பேர் பதினாறு முறை எனது வலைதளத்தை சொடுக்கினார்கள் எனக்கொள்கிறேன். நன்றி.

************************

ஒரு கதையை இனிய தங்கை அனுப்பியிருக்கிறாள்!

தந்தையும் பத்து வயது மகனும் புங்கமரத்துக்கு அடியில் அமர்திருக்கிறார்கள். அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார். மகனே மரத்தில் இருக்கும் பறவை எது. அது ஒரு காக்காய், என்கிறான் மகன். மீண்டும் அப்பா கேட்டார்.

நீ என்ன செவிடா.. அப்பா. நான் சொல்வது கேக்கவில்லையா. அல்லது நீ ஒரு குருடா.

அப்பா சொன்னார். உன் மூன்று வயதில் இதே இடத்தில் இந்த கேள்வியை நூற்றி எழுபது முறை கேட்டாய் மகனே. நான் ஒவ்வொரு முறையும் உன் முகத்தில் ஒரு இனிய முத்தமிட்டு சொன்னேன் 'அது ஒரு காக்கை' என்று.

இப்பொழுது நான் மூன்று முறை அந்த கேள்வியை கேட்டதும் நீ என்னை செவிடன்கிறாய்.

***************

பிள்ளைகளைப் பெறும் வரை நாம் பெற்றோர்களை குறை சொல்கிறோம். பிள்ளைகள் பெற்ற பின் நாம் குழந்தைகளை குறை சொல்கிறோம்.

*****************

நேசமித்திரனை இந்த பத்து பெண்களிப்பற்றிய குறிப்புகளுக்கு தொடர் பதிவை அளிக்க முதலில் அழைக்கிறேன்.

**********************

பத்து பெண்கள்






























யாரும் என்னை அழைக்கவில்லை. இதில் என்ன வெட்கப்படவேண்டியிருக்கிறது! நானும் எனக்கு பிடித்த பத்து பெண்கள் யாரென்று யோசனை செய்தபோது ...
இதில் ஒருவரே இரண்டு பேராக இருக்கிறார்.
எல்லோரையும் தெரிகிறதா?
(எனக்கு மிக மிக பிடித்த மறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியத்தின் படம் கிடைக்கவில்லை)
******************
பின்னூட்டம் அளியுங்கள் மக்களே!
********************

you know onething.. I am out of Music.


அந்த இசைக்கருவியின் தந்திக்கம்பி
ஒலியிலிருந்து விலகியோடுகிறேன்
அதிர்ந்தடங்கும் கம்பியினுள் குவிந்தடங்கும்
ஒலிப்புள்ளியாய் சூனியம் சேர்க்கிறது கணம்
எளிய வழியை உன் விழியில் வைத்திருக்கிறாய்
பொறுமையாய் உள்நுழைய எதுவாய் இருக்கிறதுன்
இதயம். நண்ப...
இசைக்கருவியின் அமைப்பியல் பருண்மை
இலகுவாக்குகிறது இசையை அது
நீ இல்லாத தருணங்களை இசைக்கிறது
குழந்தையொன்றின் கேவல் போல
மேலும் அது என்னில் காதலை தளிர்க்கிறது
நான் ஓவியம் வரைகிறேன். அனைவரும்
என்னை இசைக்கலைஞன் எனவே விளிக்கிறார்கள்
நான் சென்றுவிடவே விரும்புகிறேன்
நீ இல்லாத இடத்தில் எனக்கு
அல்லது இசைக்கு அல்லது அந்த
இசைக்கருவிக்கு இடமில்லை நான்
செல்லுகிறேன் உன்னிடமிருந்து
உன்னிடத்திற்கு விழி முன்னாள் இதை
நிகழ்த்தும் யாரோ ஒருவனின் இசையை
மரண நரம்பென்கிறேன்
எளிய இசையை ஆயுதமாக்கும் மாயக்காரனின்
விருப்பம் எனதுயிர் என்றால்
அதை உனக்கு தானமாக்குகிறேன்
எனவே..

15.4.10

யதார்த்த சினிமா என்றால்,

இந்தியாவில் உலகத்தரத்தில் எதுவும் இல்லை என்கிறான் பார்த்திபன். ஊழல் கூட உலகத்தரத்தில் இல்லையாம்! உலகத்தரம் என்றால் என்ன என்கிற நியாயமான கேள்வியும் இருக்கிறது. இது பற்றி நான் சொல்ல கொஞ்சம் இருக்கிறது.

மற்ற விசயங்களை தொடவில்லை. சினிமாவை மட்டுமே எடுத்துக்கொள்வோம். என்னைப்பொறுத்தவரை இந்தியத்தரம் இருந்தாலே போதும். பதிவர்களில் நான் படித்தவரைக்கும் அங்காடித்தெருவை கொண்டாடியே இருக்கிறார்கள். ஒரு தினசரி இதழில் வரும் செய்திகளைவிட நமக்கு யதார்த்தத்தை அள்ளிக்கொட்டும் ஊடகம் ஏதேனும் இருக்கிறதா?

செய்தித்தாள்களில் வரும் பல்வேறு செய்திகளை எடுத்து வெட்டி ஒட்டி கதை செய்து அதை திரைக்கதையாக்கி இனிமா.. மன்னிக்கவும் சினிமா செய்தால் என்னவென்று சொல்வது. யதார்த்தமற்ற கருத்துருவாக்கங்களை யதார்த்தமாக நம்மை ஊடகங்கள் நம்ப வைத்து வெகு காலமாயிற்று.

காதல் என்கிற படம் வருவதற்கு முன்னாள் இவ்வகையான படங்கள் எத்தனை வந்திருக்கும்? இதில் பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் தவிர எத்தனை படங்கள் வெற்றியடைந்தன?

இவர்கள் சொல்லுகிற எதார்த்தம்தான் என்ன. சினிமா என்றாலே மிகை எதார்தம்தானே. மனித உறவுகளில் நடைமுறைச்சிக்கல், தனிமனித இயக்கம் சமுதாயத்தின் மீது கொள்ளும் உறவு, இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் மற்றும் கிடைக்காதவனுக்கும் கிடைக்கிறவனுக்கும் இடையே நிகழும் வன்முறை, நம்பிக்கையின் மேல் விழும் அடியின் வலி போன்று மிகக்கடுமையான பிரச்சனைப்பாடுகளை பற்றியெல்லாம் சொல்லி கடுப்படிக்கப் போவதில்லை.

இதெல்லாம் யதார்த்த சினிமா என்றால், வீடு (அர்ச்சனா!! ) போன்ற படங்களை கலைப்படங்கள் என்று ஒதுக்க முடியுமா? என்னுயிர்தோழன் போன்ற படங்களும் தமிழில் வந்திருக்கிறது. யதார்த்த கதாப்பாதிரங்களை உயிர்ப்புள்ள சினிமாவில் காட்டமுடியாதா.

எண்பதுகளில் வெளியான சினிமாக்களில் எத்தனை எடுத்துக்காட்டுகளை சொல்ல! திஸ் இஸ் சினிமா என்று டைட்டில் கார்டில் முழங்கிய அவள் அப்படித்தான், எந்திரனின் எங்கேயோ கேட்ட குரல்.. இன்னும் எத்தனை...

பணம் சம்பாதிக்க வேண்டும். எப்படி எடுத்தால் ஓடும். எடு அதை. அவ்வளுவுதான். நாம் பார்த்து தீர்க்கிறோம் வெட்கமில்லாமல். ஏனென்றால் இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றே நமக்குத்தெரியாது.

வங்காளம், சத்தியஜித் ரே, ஷ்யாம் பெனகல், அக்ரகாரத்தில் கழுதை என்றெல்லாம் உளறவில்லை. சமீத்தில் ஹிந்தியில் வெளியான காமினே, லாஸ்ட் லியர் பாருங்கள். லாஸ்ட் லியரில் அமிர்தாபின் உச்சகட்ட திறமையை உணருங்கள். எனக்குத்தெரிந்து தமிழில் மனித உணர்வுகளுக்கு திரைக்கதை செய்த படம் காதலுக்கு மரியாதை. அதுவும் அந்த படத்தின் நிறைவுக்காட்சி மட்டும்தான்.

பசங்க என்றொரு படம். நல்லாத்தான் இருந்தது. ஒரு பாடல் காட்சி மட்டும். ப்ளூ அம்ரெல்லா (நீலக்குடை) பாருங்கள். குழந்தைகள் படம் எப்படி இருக்க வேண்டுமென்று. இரானியப்படங்களைப் போல அற்புதங்களை எதிர்பார்க்க தேவையில்லை. குறைந்த பட்சம்...

வெண்ணிலா கபடி குழு படம் தான் என் பார்வைக்கு சற்றேறக்குறைய யதார்த்த சினிமாவாக இருக்கிறது. மொத்தத்தில் நான் சொல்லவருவது, இப்போது வரும் யதார்த்த வகைமைகளில் வரும் சினிமாவிற்கும் யதார்த்தத்திற்கும் குறைந்த பட்சம் உங்கள் இருப்பிடத்திற்கும் அதற்கு சமீபமான திரையரங்கிற்கும் இடையே உள்ள தூரம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது என்பதே.

************

டிஸ்கு.

சாரு நிவேதிதாவின் வாசனை வீசுகிறது இந்த கட்டுரையில் என்று கண்டுபிடித்தவர்களுக்கு இன்னும் பதினேழு நாட்களுக்குள் சொர்கத்திலிருந்து சுஜாதா மேனகையிடமிருந்து வாங்கிய வாடா மலரொன்றை பதிவுத்தபாலில் அனுப்பி வைப்பார்.

*****************

14.4.10

வானேறிப் பறக்க

எங்கிருந்து தொடங்குகிறது இந்த ஒலி. எக்கணத்தில் அது மாறுகிறது உயிர்கொல்லும் இசையாய். செவிச்சவ்வுகளின் நுண்துளைகளை அது எவ்வாறு கண்டடைகிறது. அவ்வாறே நான் உன்னைக் கண்டடைந்தேன்.

நீண்ட தோள்சாயும் யாழின் தந்திக்கம்பிகளில் இருந்து வெளியேறும் ஒலியென நான் வெளியேறுகிறேன். துயரம் தோய்ந்த இசைத்துணுக்குகளாய் மாற்றிப் பரவச்செய்கிறது உன் மௌனம். ரீங்காரம் அடங்கி மௌனப்பூக்களாய் உதிர்கிறேன். அவ்வாறே நீ என்னைக் கண்டடைந்தாய்.

மௌனப்பூ நான்.

செவிகொள் இசை நீ.

பழியற்ற சொல் பாவம் நான்.

ஒளியின் ஒலி நீ.

பச்சைவாடை வீசும் மாந்தோப்பிலிருந்து வெளியேறிப் பறக்கும் கிளிகளின் அச்சமும் நாணமும் நாமறியாது. அக்கிளிகளின் சப்தம் வானறியாதது. பார். பறவைகளுக்குத்தான் சிறகு தேவை பறக்க. நமக்கு நம் சொற்கள் போதும் வானேறிப் பறக்க.

***********************

விக்ருதி

தையில் பிறந்த இந்த ஆண்டை மறுபடிக்கும் சித்திரையில் பிறக்கவைக்கிறது நடைமுறை. தவிரவும் வருடத்திற்கு ஐந்தாறு வருடப்பிறப்பை கொண்டாடுகிறது சுதந்திர இந்தியா. என் வீட்டில் தெலுங்கு பேசுகிறேன். எந்த பரம்பரையில் இருந்து வந்தேனென்று தெரியவில்லை. இருந்தாலும் தமிழன். கனவும் சிந்தனையும் தமிழில்தான் நிகழ்கிறது என்பதே நான் தமிழன் என்பதற்கு அடையாளமென கொள்கிறேன்.

எனவே,

இன்று 14.04.2010 புதன் கிழமை, காலை 06.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அம்மாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீனராசி, மேஷ லக்னத்தில் நவாம்சத்தில் சிம்ம லக்னம், கும்ப ராசியில் புதன் ஹோரையில் வைதி ருதி நாம யோகம், நாவகம், நாமகரணம், மரணயோகம், நேத்திரம் ஜீவனற்ற பஞ்ச பட்சியில் மயில் துயில் கொள்ளும் நேரத்தில் புதன் தசை ராகு புத்தியில் (ங்கொய்யால ....) பிறந்ததாக சொல்லப்படும் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது விக்ருதி வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்.

இன்று தினமணி இதழில் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதின் விக்ருதி பற்றி ஒரு சுவாரஷ்யமான கட்டுரை இருக்கிறது.

அனேகமாக அடுத்த விக்ருதியில் சீனா நம்மை இலங்கை போர்தளத்திளிருந்து நம்மை தாக்கலாம். தமிழ் கடற்கரை மிக நீண்ட வருடங்களுக்குப்பின் போர்கோலம் பூணலாம். நம் பேரப்பிள்ளைகள் ஜாதிகள் மறந்து தமிழன் என்கிற உணர்வுடன் வேறுவழியில்லாமல் தமது முன்னோர்களின் வீரத்தை(!) மெச்சியவண்ணம் போரில் வீரமரணம் அடையலாம். லாம்...லாம்... லாம்..ம்ம்.ம்ம்.

*************************

***********************************

11.4.10

grape wine..

போலந்து பிரசிடென்ட் செத்ததுக்கு ஒரு அஞ்சலி. ************************************************************************************* ஏப்ரல் பத்து. வர்த்தகம் சம்பந்தமாக இந்தியா எதோ ஒரு தினத்தை கொண்டாடியது. யாருக்கு பெருமை. நியூஸ் சானல் பார்த்தவர்களுக்கே வெளிச்சம். அது சரி, வர்த்தகம் ? ****************************************************************************** பார்த்திபன், வசந்த பாலர்கள் மேல் என்கிறான். வேட்டைக்காரன், சுறா போன்றவர்களை விட. நான் இருவர்களுக்கும் தராசில் இரண்டு தட்டுகளையும் ஒருவருக்கொன்றாய் தருகிறேன். இரண்டும் சமம் காட்டுகின்றன. ************************************************************************** ரௌத்திரம் பழகு. நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம். bull shit! ******************************************************************************
பிச்சை பாத்திரம். நிறைய பணம். ஒருவன் வந்தான். பிச்சைக்காரனை ஓங்கி ஒரு அப்பு. பாத்திரத்தில் இருந்த பணத்தை எடுத்து பக்கத்தில் இருந்த நான்கு பேரின் பாத்திரத்தில் பகிர்ந்து அளிக்கிறான்.

இது சரியா... தப்பா..

நாலு பேருக்கு நல்லது செஞ்சா ............. மாப்ள.. வக்காளி ஏதும் தப்பில்ல. அந்த

நாலு பேரைத் தவிர ஒரு பய உருப்படியா இருக்கக்கூடாது.

பஸ்ஸில் வரும் போது பக்கத்து சீட்டு பையன் அவன் அம்மாவிடம் சொன்ன கடி ஜோக்!

இதை நிறுவன பாடத்திட்டம் 'grape wine.. ' என்று பெயர் வைக்கிறது.

*****************************

காதலின் பொன் வீதியில்.. நானொரு பண் பாடினேன்.. பண்ணோடு ஒருத்தி வந்தாள்..

ஓவிய நண்பனுக்கு கிடைத்து விட்டாள்.. !

*************************************

இனிய நண்பன் வசு மீண்டும் தனதான கவிதைகளை எழுதத்தொடங்கி விட்டான். மகிழ்ச்சி.

இனிய முத்தம் ஒன்று.

************************************

10.4.10

சொல்லுவதெல்லாம் பொய் 11

கொட்டைப்பாக்கு வண்ணத்தில் எண்ணெய் தடவியது போல பளபளப்புடன் ஒரு ஏறும்புண்ணி சிறு புதரிலிருந்து வெளியேறி நிதானமாக நெருஞ்சிகளுக்குள் நடந்து சற்று பெரிய புதருக்குள் நுழைவதுவரை மார்கழர் அந்த புங்கன் பின்னால் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். ஒற்றையடிப் பாதை சற்று சிதைவுற்றிப்பதாக பட்டது. மனிதர்கள் அதிகம் உபயோகப்படுத்தாத நிலம். நல்ல கரும்பாறையொன்றின் மீது ஏறி நின்று பார்த்தேன். பெரும் நிலவெளி. குன்றுகளால் நிரம்பியிருந்தது. மார்கழர் இல்லா விட்டால் திரும்பவும் அவர் வீடு காணமுடியாது. எதற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன். நான் ஏன் என் போக்கில் போகமுடியவில்லை. இந்த மூன்று நாளாய் இந்தக்கேள்விக்கு என்னால் பதில் காண முடியவில்லை. பின் தலையின் உள்ளுக்குள் ஒருவகையான சூட்டை கிளப்பிக்கொண்டே இருக்கிறது. உண்மையில் நான் என் திருமணத்துக்கு பயந்துதான் வெளியேறினேனா. அல்லிக்கன்னி ஞாபகம் எழும்பியது. மார்கழி அகலில் அவளைப் பார்த்தபோது நிலைமறந்த ஞாபகம். தங்கவார்ப்பு. பின் ஏன் வெளியேறினேன். ஒரு கணம் முடிவுசெய்து மேற்கு நோக்கிய பயணத்தை தொடங்க என்ன விகல்பம்.

போகலாம் சென்னி. மர்கழர் தோள் தொட்டார். அப்பாறை மீது அவர் ஏறியது எனக்கு மெல்லிய வியப்பளித்தது. அது சற்று முரடானது. உறுதியான ஊசிமுனைக் கற்களை நிரப்பியிருந்தது. என் எண்ணத்தை புரிந்து கொண்டது போல அவர் சொன்னார். பழக்கம் இளைஞா.. என் வாழ் நாளில் நாள் தொடர்ந்து பயின்று வரும் விசயங்களில் இதுவும் ஒன்று. தொடந்த பயிற்சி. இதுதான் துல்லியத்திற்கு திறவுகோல். துல்லியம் வாய்க்கப்பெற்றால் என்ன நேரும் தெரியுமா. நான் உடனடியாக பதில் சொல்லவில்லை. அறிந்த கேள்வி. தெரிந்த பதில். ஆனாலும் உடனடியாக ஏதும் சொல்லவில்லை. தொடர் பயிற்சி என்பதன் குழந்தை துல்லியம். இந்த எளிய அறிவுத்தேட்டம்தான் அனைத்திற்கும் முதல் அடி. சொல் சென்னி, துல்லியம் பெற்றவன் என்ன ஆவான். இலக்கை அடைவான் என்றேன். நன்று சொன்னாய். ஆம் துல்லியம் பெற்றவன் இலக்கு அடைவான். ஆனால் சென்னி நான் சொல்லுகிறேன். இன்று எனது முதல் பாடம் என இதைக்கொள். சென்னி, துல்லியம் பெற்றவன் இலக்கை வெறுப்பான். எனக்கு புரியவில்லை என்றாலும் எதோ ஒரு ஆர்வம் அந்த வாக்கியத்துக்குள் என்னை செலுத்தியது. பிறகு எதற்கு பயிற்சி. இலக்கை அடையத்தான். அதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். இலக்கை அடைய இலக்கின் மேல் விருப்பமோ வெறுப்போ அடையத்தேவயில்லை. அடையப்படவே இலக்குகள் உருவாகின்றது. அவ்வளவுதான். விருப்பமில்லாத இலக்கை அடைந்ந்து என்ன பயன். அந்த விருப்பத்தை பயிற்சி மட்டுப்படுத்தும். என் வினாவிற்கு இதுவல்ல பதில். இரண்டு வாக்கியங்களுக்குள் இருக்கும் தொடர்பை கண்டுகொள்வதுதான் ஒரு சாத்திரக்காரனின் ஆதாரத்தேவை.

முதல் ஜாமத்தின் மத்தியில் வெளிச்சம் மிகவும் குறைவுற்றிருந்தது. பறவைகள் கூடையும் கீச்சொலிகள். மிகத்தூரத்தில் ஒரு பிளிறல் கேட்டது. விடியலில் வீடு திரும்புவோமா என்றேன். இல்லை. நாம் வீடு வர இன்னும் பதிமூன்று நாட்களாகும். இன்றிலிருந்து பதிமூன்றாம் நாள் உனக்கான முதல் பௌர்ணமி. சித்திரையின் திங்கள் உன் குடுப்பினை. வளர் பிறை பதினைந்தும் நாம் பயணத்தில் இருப்போம். தேயும் பிறை பதினைந்தும் நாம் வானம் பார்ப்போம். நட சென்னி. முழு இரவும் நட. பகல் முழுதும் உறங்கு. உணவு. சேகரிப்போம். உணவு சேகரிக்கும் வித்தை மூச்சுவிடுவதுபோல இயல்பாய் கைவரச் செய்கிறேன். நிதானமாய் நட. உறுதியையும் விடாமல்.

***************************

கணமற்றதொரு கணம்: குறுமுனி பாடுராம்ப்பா.. பெரிய தாடிப்பா... தரையில கெடக்குது.. பாடுராம்ப்பா. உம்பாட்டன் கிட்ட போய் பாடு குள்ளா.. அப்பன் அதட்டியதும் அடங்கியது பாட்டு.

************************

7.4.10

நுண் வன்முறை


தெருவை கடக்கும்போது நாம் எவற்றையெல்லாம் கடக்கிறோம். நமது மூளையின் - அவரவர்மூளையின் - அனுபவ சேகரிப்புகளில் இருந்து அத்தெருவில் நிகழும் நிகழ்வுகளை நமது மனம் உள்வாங்கும். சில நிகழ்வுகள் நம்மை நெகிழச் செய்யும். சில நிகழ்வுகள் நம்மை அருவருக்கவைக்கும். சிலநிகழ்வுகள் நமக்கு சிரிப்பை வரவழைக்கும். சில நிகழ்வுகள் எரிச்சலுணர்வு அளிக்கும். சில நிகழ்வுகள் நமது பால்யத்தை மீட்டுக்கும். சில நிகழ்வுகள் நம்மை கோபம் கொள்ளச்செய்யும். இப்படி பல வகைமைகளுக்கு நம்மை இழுத்தடித்து விடும் ஒரு நெரிசல் மிகுந்த கடைவீதி.

அனாலும் ஒரு மனிதனுக்கு இவ்வகையான பலதரப்பட்ட உணர்வுகளுக்கு ஆட்படுத்த ஒரு தெரு தான் வேண்டுமென்பதில்லை. அறையில் அமர்திருக்கும் போது கேட்கக்கிடைக்கும் எதிர்பாராத ஒரு ஒலித்துணுக்கு போதும்.

வசந்தபாலனை குறைசொல்ல முடியாது. யதார்த்த சினிமா என்கிற மண்ணாங்கட்டி ட்ரெண்டில் தமிழ் சினிமா ஜந்துக்கள் ஊறித்திளையும் போது. அங்காடிதெரு அப்பிடியான ஒரு ட்ரென்டெட் சினிமா. விசு, வி.சேகர் போன்றவர்களின் படங்கள் ஞாபகம் இருக்கிறதா. அவ்வகைப்படங்களின் டிஜிடல் வண்ணம்தான் இவ்வகைப்படங்கள். தொழில்நுட்பம் கூட்டப்பட்ட, நம்பகத்தன்மை கூட்டப்பட்ட கணினி மய ஓரங்க நாடகங்கள் இவை. ஜாதகாரன் பொய் சொல்லக்கூடும். கணினி ஜாதகம் பொய் சொல்லாதது!

தெரு. நின்றுபார்த்தால் தெரிவதெல்லாம் யதார்த்தம் என்று சொல்லமுடியுமா. சரவணா ஸ்டோர்ஸ் - மன்னிக்கவும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் பற்றிய எதிர்மறையான திரைக்கத்திக்கு - மறுபடியும் மன்னிக்கவும் - திரைக்கதைக்கு அன்னாச்சிகளிடமிருந்து தனிக்கருத்து ஏதும் வரவில்லைஎன்றால், இங்கு யதார்த்தம் என்றால் என்ன என்கிற என்குழப்பம் என்னோடு போகட்டும்.

இனிய புனைவெழுத்தாளர் திரு ஜெயமோகனின் உரையாடல் யதார்த்தத்தின் உச்சம் என்று சொல்லும் நண்பர்களுக்கு, மறைந்த வசனகர்த்தா எ.எல். நாராயணனின் (பெயர் சரியா? 'வாழ்வேமாயம்' போன்ற படங்களில் எழுதியவர்) வசனங்களையும் மறையாத இயக்குனர் கே.பாக்கியராஜ் அவர்களையும் நினைவில் கொள்ள வேண்டும். நிச்சயம் திரு ஜெயமோகனின் வசனம் சிறப்பான ஒன்று. அகில உலகமும் மேற்சொல்லும் "யாருன்னு கேட்டா... சிரிச்சேன்" உரையாடல் எனக்கும் பிடிக்கும்.

இப்படியான நச்சென்ற வசனங்களின் பட்டியலை தொடர்பதிவாக எழுத முதலில் ஜெகன்னாதனை அழைக்கிறேன். அப்புறம் க.சீ.சிவக்குமாரையும் அழைக்கிறேன்.

எனக்கு பிடித்த மூன்று:

ஏம்மா.. ஒத்தபுள்ளையோட நிறுத்திட்டயேம்மா. (மணிரத்தினம் - தளபதி படத்தில் ஸ்ரீவித்யாவைப் பார்த்து ஒரு பெண்)

ம்ம்ம்.. மெண்டல் னு எழுதிக்குடுங்க. (காவேரி தொடரில் பாஸ்கர் சக்தி)

ஓர்மை உண்டோ ஈமுகம் - சுரேஷ்கோபி தனது படங்களில் அடிக்கடி உபயோகிப்பார்.!

எதையோ எழுதப்போய் எங்கேயோ வந்து நிற்கிறேன்.

ஆக..
வன்முறையின் பல்வேறு வெளிப்பாடுகளில் நுண் வன்முறை என்பது ஒருவகை. கத்தியின்றி குருதி கசியச்செயும் வகை. நண்பர்கள் நல்ல சினிமா என்று நம்பிவேறு தொலைக்கிறார்கள்.நம்பிக்கையை குழைப்பது அல்ல என் பணி. எனவே யதார்த்தம் ரங்கநாதன் தெருவில் ஒவ்வொரு பின் சுவர்களிலும் துப்பப் பட்ட எச்சில் கறைகள் போல கலவையான மற்றும் ரகளையான நிறங்களில் அப்பிக்கிடக்கிறது என்பத்தை நான் நம்புகிறேன்.

மற்றபடிக்கு, மற்றுமொரு நல்ல திரைப்படத்தை தமிழ்மக்களின் பார்வைக்கு வைத்த வசந்தபாலனுக்கு நன்றிகள்.
*************************
முதல் டிஸ்கி:
எதையாவது ஒன்ன உருப்பிடியா சொல்றா கோந்துத்தலையா .. என்று கூவும் நண்பர்களே: உருப்படியாதான் ஆரம்பிச்சேன்.. ஆனா .............. ஆ ........!
**********************

6.4.10

உலைக்கலன்


உங்களுக்குத்தெரியுமா நாம் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சாலையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று. நம் சாலைகள் திருத்திய கணித சமன்பாடுகளால் துல்லியமாக விரவப்பட்டிருக்கிறதென. தினமும் கிலோரின் கலந்த நிலத்தடி நீரால் அச்சாலை தூய்மை படுத்தப்படுகிறதென. மேடுபள்ளமற்ற குறுக்கில் மலைப்பாதைஎன்றாலும் கணவாய்துளைத்து மிக நேர்த்தியாக ஜல்லிகளால் மெத்தபடுத்தப்பட்டதென. வளைவுகளை சகிக்காதாத நேர் பாதையென. குறிப்பிட்ட காலாவதிநாளைக்கொண்டதென. திரும்ப வியலாத ஒற்றைப்பாதை என. உங்களுக்குத்தெரியுமா எல்லா சாலைகளும் நமக்கு வலது புறத்தில் அமைக்கப் பட்டிருக்கிறதென.

********
உங்களுக்குத் தெரியுமா சூளைக்குள் மணல்கட்டிகளைத்தவிர உயிர்ப்பொருள்கள் வாழமுடியாதென. சுவாசிக்க ஏதுவான சூழல் அதனுள் இல்லை என. மணற்துகள் கூட்டமாய் அடைக்கப்பட்ட இடத்தில் சூளை பழுதாகுமென. நிறுத்தப்படாமல் நெருப்பேறும் சூளையில் வேகும் மண்கட்டிகள் உபயோகம் தராதென.

**************

உங்களுக்குத்தெரியுமா தலைப்பென காணப் படுபவைகளுக்குள் நிலம் நிறைத்திருக்கிறதென. அதில் மனிதர்கள் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறார்களென.
அவர்கள் தினமும் தினசரி படித்து தங்கள் அறங்களை தங்களது சுயத்தில் உரசிப்பார்த்து நிறைவுடன் வெந்து கழிக்கிறார்கள் என.

***************************
உங்களுக்குத்தெரியுமா ஆசீர்வதிக்கும் ஒவ்வொரு கடவுளும் ஒழுக்கத்தின் மீதிருக்கும் தனதான காதலை தங்கள் உள்ளங்கையில் பொங்கச் செய்வார்களென.

*****************************



5.4.10

வேட்கையின் இலக்குகள்

வரிகளில் மறைத்த பொறிகளை இலகுவாக கண்டடைகிறாய் . அவமானம் பிடிங்கித்தின்கிறது . இலக்குகள் எல்லாவற்றிற்கும் உன் சாயலை கொண்டுவந்து பூசுகிறாய். நான் எதை வீழ்த்தினாலும் நீ விழுவது தற்செயல் அல்ல என்பதை சொல்கிறது உன் நங்கூரத்திலகம். சாட்டைகளையும் குருவாள்களையும் அடுக்கிய பெருஞ்சிப்பமொன்றை சுமந்தலையும் என்னிடம் உன் நீண்ட மெல்லிய விரலின் நகங்களை பூவாக்கி கொய்யச்சொல்கிறாய். மரணம் என்பது நெடிய வாழ்வின் தடம். அன்பு தடவிய என் அம்புகளுக்கு பலியாவது இலக்குகளின் கடன்.

**********************************

யாசிப்பிற்கு பிடிபடாதது நமதான வேட்கை. பிச்சைபொருளும் அன்று. பசிய இலையொத்த பறவைகளின் அலகில் சிக்கிக்கொள்ளும் விதையுள் தவறிய பெருவிருட்சம் அது. விசும்பில் கிளைபரப்பி நினைவுகளில் வேர்கொள்ளும் ரணம். முரணாக நீயும் நானும் கேட்டலையும் அந்தக தாகத்தை கையில் பிடித்தபடிக்கு கானகம் அலையும் சில்வண்டுச்சிறுமியை பின்தொடர ஏதுவான வாகனம் ஒன்று மூன்றாம் இரவின் நிறத்தில் திரியும் எருது. நீலாற்றின் கரையில் கடைசியாய் அச்சிறுமியை கண்டடையும் போது கையில் திணித்தாள் ஒரு சுளை வெயிலை.

**********************************

1.4.10

சொல்லுவதெல்லாம் பொய் 10


வீடு வந்துவிட்டாயா. மார்கழர் கேட்ட கேள்வி எனக்கு பிடிபடவில்லை. எரிமீனின் தினவு தீரவில்லை இளைஞா.. உன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது. உன் பூர்வம் அப்படி. அபூர்வத்தின் கிரகச்செர்க்கை. வா என்னுடன், பேசலாம் நாம். மறுத்துப்பேச தோன்றவில்லை. ஆனாலும் பயம் தாண்டிய மனத்தூண்டல் எனக்குள் அலைக்கழித்தது. அவர் தொடர்ந்து பேசத்தொடங்கினார். இன்றிலிருந்து மூன்றாம் பௌர்ணமி வரை நீ என்னுடன் தங்கு. உனக்குச்சேரவேண்டியத்தை அதற்குள் நான் கொடுத்துவிடுகிறேன். உன் மனக்குழப்பம் எனக்கு புரிகிறது என்பதை சொல்லத்தான் வேண்டுமா. நீ அவ்வளவு எளியவனும் இல்லை. எத்தனை நாள் ஆயிற்று. நான் அவரை பார்த்தேன். மெலிந்த தேகம். உடலுறுதி குழையத்தொடங்கியிருந்தது. நீண்ட கேசம். நரையில்லை. முகம் திருத்தமாக சவரம் செய்யப்பட்டிருந்தது. நாசிக்கு இடப்புறம் கருமிளகு அளவில் ஒரு மரு இருந்தது. நாசிக்குக் கீழிருந்த முடிக்கற்றைக்கு அது ஒரு சிறிய தலைப்பாகை போலிருந்தது. இடைக்கச்சு மட்டுமிருந்தது. உடலில் எந்த திரவியப்பூச்சும் இல்லை. உயரமான உடம்பில் நீண்டிருந்த கைகளும் கால்களும் ஆலமரவிழுதுகளை நினைவூட்டின. நிதானமான நடை என்றாலும் ஒவ்வொரு எட்டும் இரண்டரை அடிக்கு மேல் போயின. நான் அவரை பின்தொடர சற்று வேகம் காட்டவேண்டியதை தெரியாமல் இருக்க அவ்வப்போது ஒரு செருமலை வெளியேற்றினேன். சொல் எப்படி வந்தாய் மாந்தைக்கு. அதற்குமுன் உன்னை எப்படி விளிப்பது.
இந்த குரல் ஒரு கட்டளைப்போல் என்னுள் இறங்கியது. உடல் நடுக்கத்தை உடனடியாக சீராக்கியது. ஒருவித இளைப்பாறல் மனநிலையை ஏற்படுத்தியது போன்றதொரு சூழலில் நான் சொல்லத்தொடங்கினேன். எல்லாவற்றையும்.

கணமற்றதொரு கணம். வாசப்படியில் உக்காராதே என்றால் கேட்க மாட்டாயா. எத்தனைமுறை சொல்வது.

சென்னி என்று என்னை விளிப்பர். எனக்கு பூழிநாடு. அய்யன் எருது காப்போன். அம்மை திருமேனி. பால்காரி. கீழ்மலை ஒட்டிய தயாபுரி கிராமம் என்னை வளர்த்தது. கூடவே வளர்ந்தது மூவேழு எருதுகள். மணம் பேசினார்கள். பிடிக்கவில்லை. கிளம்பிவிட்டேன். மர்கழரின் சிரிப்பொலி கேட்டு நிறுத்தினேன். பங்குனி முதல்நாளில் உச்சியில் வெளியேறினாயாக்கும்.. சிரிப்பில் ஏலனமில்லை. துயரமிருந்தது. அவள் பெயர் என்ன. யார் பெயர். உன்னை மணம் முடிக்கப்போகும் பெண். நான் அவளை மணம் முடிக்கப்போவதில்லை. யாரை. மேருநடையாரின் புதல்வி அல்லிக்கன்னியை. ஹா..ம்ம் .. இது வெகுநீண்ட கதைதான். கேள் இன்று முதல் மூன்று திங்களுக்கு நான் உன் குரு. ஆனால் என்னக்கு நீ மட்டும்தான் மோட்சம். எனது வேள்விக்கு பதில்நீ. உவகை பொங்குகிறது. உன் விதி உன்னை வழிநடத்தும். என் பாரம் இறங்கியதும் நான் சென்று விடுவேன். இனி தூக்கிச்சுமப்பது உன் வினைப்பயன். பயம் கொல்லாதே. போகப்போக விளக்குகிறேன். அவளைப்பார்த்தாயா. இல்லை. ஆனால் அவள் உன்னைப்பார்த்தாள். இல்லை, அவள் என்னைப் பார்த்ததில்லை. இளைஞா.. சென்னி..என்றே இனி அழைக்கிறேன். நான் சொன்னது நல்லினியை. கன்னியை சிலகாலம் நீ மற. அவளை உன்னை கண்டடைவாள் ஒரு சிறு புயல் போல.

நான் மர்கழன். கூடல் என் ஊர். கூடலூர்கிழார் என்கிற கவிஞன். தொழில் வான சாஸ்த்திரம். என் கணிப்பில் இறந்தவந்தான் இன்று சிதையேறிய அத்துவன். எனது வாழ்த்து மீறி வினை வெற்றிகொண்டது அவனை. என் கணிப்பின் மிச்சம் நான் எவரிடத்திலும் சொல்லவியலாது. இவ்வுலகத்தில் அது எனக்கும் நான் சொன்னபின் நல்லினிக்கும் மட்டுமே ஆன ரகஸ்யம். ரகஷ்யத்தின் மூலப்புள்ளி நீ. சென்னி, இன்றிரவு என் இருப்பிடத்தில் வந்து ஆழ்ந்த உறக்கம் கொள். ஏனென்றால் நாளை முதல் மூன்றாம் பௌர்ணமி வரை உனக்கு இரவு தூக்கம் கிடையாது. வானத்தைக்கற்றுகொள்ள இரவுதான் மிகச்சரியான காலம்.

வான சாத்திரம் என் வித்தை. அதைத்தான் நான் உன்னுள் இறக்கப்போகிறேன்.

******************

தொடரும்..

***************

குள்ளச்சாத்தான்


UTV- world movies - ல் இந்த படத்தை மீண்டும் பார்த்தேன். படம் முடிவதற்குள் அழுகை கோபம் சிரிப்பு பொறாமை சோகம் தாபம் இன்னும் என்னென்ன உணர்வுகளுக்குள் நுழைந்து வெளியேற வேண்டும்? படத்தை எடுத்தவனுகளை கையெடுத்து கும்பிடவேண்டும். மனிதர்களின் முகபாவங்களை இவ்வளவு துல்லியமாக காட்டமுடியுமா என்ன? இத்தனைக்கும் படம் முழுவதும் fast farward - ல் இருக்கும். படத்தில் வசனங்கள் வேறு கிடையாது. படத்தின் விமர்சனங்களை எதையும் படிக்காதீர்கள் படம் பார்க்கும் வரை.



*************************

முட்டாள்

தினமும் சுமக்கமுடியாத அளவுக்கு முட்டாளாகிக்கொண்டிருக்கிறேன், இந்த வள்ளலில் என்னை ஒரு விட்டுபோன நண்பர் குறுஞ்செய்தி கொடுத்து முட்டாள் பட்டத்தை உறுதிசெய்தார். முட்டாளாய் இருப்பது துயரமில்லை. முட்டாள் என்று தெரிந்தே இருப்பதுதான் துயரம். வாழ்க என் துயரம். எனவே.. நானொரு முட்டாளுங்க!
******************
பசங்களுக்கு வருட முழுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் தங்களது வாரிசுகளின் சேட்டைகளை பெருமை பொங்க பதிந்து தள்ளுகிறார்கள்! நல்லதுதான். புத்திர பாசம். ஜெயமோகன் தனது மகனின் அருமைகளை ஒரு அற்புதமான தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து எழுதி தள்ளுகிறார். படிக்கிறவர்கள் எம்பையனும் அல்லது எம்பொண்ணும் இருக்கே.. ஹ்ம்ம்..என்கிற அளவுக்கு காதுகளில் புகை கிளப்புகிறது அவரது ஹிப்னாடிச வரிகள். உண்மை எந்த பொந்தில் அரவங்களுக்கு இறையாகிக்கொண்டிருக்கிறதோ(தெரிந்தே தான் 'றை' போட்டேன் மக்கா). என் புத்திரன் விழுந்து விழுந்து அறிவியல் படித்து தேர்வுக்கூடத்துக்கு போயிருக்கிறான். வினாத்தாளில் படித்த ஒன்றையும் காணவில்லை. பத்து நிமிடம் இது அறிவியல் பாட வினாத்தாள் இல்லை என முடிவுசெய்து மேடத்தை அணுகி கேட்க. ஆங்கில இலக்கியத்துக்கு இதுதான் வினாத்தாள் என்றிருக்கிறார்கள். இன்னைக்கு என்ன பரீட்சை என்று கேட்டு விட்டு பொறுப்பை விதியின் மீது போட்டு எழுதிவிட்டு வந்திருக்கிறான்! கேட்க சந்தோசமாய் இருந்தது. எம்பையனாச்சே..! விழுந்து விழுந்து சிரித்ததை தான் என் மனைவி பொறுக்கவில்லை.
******************
சொல்லுவதெல்லாம் பொய் - ல் வேறொரு கதவை திறந்திருக்கிறேன். முழுக்க எனது ஞாபகத்துனுக்கில் கிளம்பிவரும் வரலாற்று தகவல்களையே கற்பனை செய்து தொடங்கியுள்ளேன். வரலாற்றுப்பிழை என்று ஏதேனும் தென்பட்டால் அதை பிழையின் வரலாறு எனக்கொள்ளவும். நான் சொல்லவந்தது இதில் ஏதாவது பிறமொழி வார்த்தையோ சமகால வார்த்தையோ இடைபட்டு இம்சித்தால் சுட்டவும். நான் கற்பனை செய்யும் காலம் கி பி நூற்று ஐம்பத்து ஆறாம் வருடம்!

**************************
அனைவர்க்கும் முட்டாள்தின வாழ்த்துக்கள்.
***********************

31.3.10

சொல்லுவதெல்லாம் பொய் 9

கணம் ஒன்றின் சாத்தியப்பாடுகள் என்னென்ன.

அநேக நேரங்களில் ஜாதககாரனாகவும் பூர்வத்தில் கதைசொல்லியாகவும் இருக்கும் அவன் இன்றயதினத்தில் பங்குனி உத்திரமாம் பௌர்ணமியில் பால் பொழியும் நிலா பார்க்க மிதிவண்டியில் சாலை கடக்கும்போது வகையறியாத வாகனத்தில் அடிபட்டு சாலையோரம் வீசப்பட்டான். அவனுக்கு நினைவு தப்பும் கணத்துக்கு முன்: அப்பா.. பேய்களுக்கு தப்புவித்து கைப்பிடித்து குளம் கடத்தி வீடு சேர்த்துவிடு என்னை.. என்கிற பின்னி மோஸசின் கவிதை வரிகளும் சில துளிகள் கண்ணீரும் உணர்ந்தான். குருதி அவன் சிரசில் வழிய அவன் கோமாவில் எழுந்தான்.

********************************

நான் மாந்தரநாட்டுக்கு நுழைந்தபோது பங்குனி இருபத்தியோராம் நாள். மன்னன் அத்துவன் உடம்பில் பொட்டு புண்ணில்லாமல் மூக்குப்பீளை நோய் தாக்கி மாண்ட தினத்தில் என் வருகை இருந்தது. மேழ ஓரை கார்த்திகை நாளில் பங்குனி பதினைந்து தினத்துள் உச்சமைடையும் உத்தர மீன். அந்த உத்தரம் கீழ் சாய எதிர்மேல் எழும் பின் எட்டாம் மீன் மூலம். மூலம் எழ முன் எட்டாம் மீன் மிருகசீரி துறை தாழும். அக்கணத்தில் எரிந்து கருகும் பெருமீன் ஒன்று கிழக்கோ வடக்கோ நகராது நிலத்தில் பெருவெளிச்சம் காட்டி வீழும். வீழ்த்த ஏழாம் நாள் அத்துவன் மரணிக்க, நான் நகர் நுழைந்தேன்.

மன்னனின் ஈமத்தில் கலக்க நேரிட்டது ஊழ்சாபம். குடநீரும் குடிப்பூவும் கொண்டுசெல்லும் வரிசையில் நான் என்னை நுழைத்துக்கொண்டேன். தீப்பந்தங்கள் வெளிச்சம் காட்ட இரண்டு பெரும் வேப்பமரங்களின் நடுவில் அவர்கள் கூடியிருந்தார்கள். அரண்மனை வாசிகள். தோற்றம் பொழிவு கலைந்திருந்தது. தீப்பந்த வெளிச்சம் எழுசூரியனின் மெல்லிய வண்ணத்தில் அடர் இருளில் பரவியிருந்தது. ஒரு சிறு பெண்டிற்கூட்டம் மரத்தடியில் ஒரு பொழிவான பெண்ணை சுற்றி நின்றிருந்தது. அவளது பொழிவு அவளது இருப்பிலேயே தெரிந்தது. மஞ்சள் துகிலில் அவளுடம்பு சுற்றப்பட்டிருந்தது. சூரியனிடம் பெறும் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் மஞ்சள் திங்கள். முகம் காணமுடியவில்லை எனக்கு. ஆண்களின் கூட்டம் சற்று பரபரப்பானது. தொலைவில் இருந்த குரும்பனையுயர சுவர்களில் சீரான இடைவெளியில் தீப்பந்தங்களுடன் ஆட்கள் நின்றிருந்தார்கள். இருட்டுக்குள்ளிருந்து ஒரு காத்திரமான சங்கொலி எழுந்தது. கட்டிலில் கிடந்த அத்துவன் உடலைச்சுற்றி அவர்கள் நின்றார்கள். தோள் அகன்ற கருத்த வீரனொருவன் இடைக்கச்சையில் தொங்கிய வாளை உருவி மிகப்பணிவான உடலசைவுகளுடன் அந்த உடம்பின் மார்பில் குறுக்காக நீண்ட ஒரு கிழிப்பை செய்தான். இடது மார்பிலிருந்து வலது வயிற்றிக்கு கீழ் வரை தோல் பிளந்தது. குருதிக்கசிவு இல்லாத அந்த பிளவில் வெண்மையான உட்தோல் தெரியவும் சுற்றியிருந்தவர்கள் முகத்தில் ஒருவித சிலிர்ப்பு தோன்றியதாகப் பட்டது எனக்கு. பின் சடங்குகள் விரைவாக நடந்தேறின. நான் இருளும் வெளிச்சமும் ஒன்று கூடும் கணத்தில் நல்லினியின் முகத்தைப்பார்த்தேன். நல்லினி. அத்துவனின் மனைவி. பட்டத்து அரசி. மாந்தர நாடு அவள் வசம். பிள்ளைப் பேரற்றவள்.

கணமற்றதொரு கணம். குளத்திற்குள்ளிருந்து வெளியேறும் குறுமுனிச்சூலி அப்பாவின் அதட்டலுக்கு அடங்கிப்போனது.

உழிஞை கொண்டுவாடா என்றதட்டும் குரல் என்னை நோக்கி வந்தது. அவள் என் கையிலிருந்த பூக்களை வாங்கி மன்னனின் உடம்பு நோக்கி நடந்தாள். அவள் பார்வை என் விழியை தொட்டு மீண்டது. துலக்கமில்லை. துக்கமில்லை. வெற்றுப்பார்வை. புதரிருளில் ஒதுங்கினேன். தொடைக்குக் கீழ் கெண்டை சதை நடுங்கியது. அரை நாழிகையில் தீப்பந்தத்துடன் அருகில் வந்து நல்ல வெளிச்சத்தில் என் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு கடுமையான சிரிப்பை மற்றவர் அறியாமல் உதிர்த்த கூடலூர்கிழாரை முதன்முதலில் பார்த்தேன். மொத்த உடம்பும் நடுங்குவதை உணர்ந்தேன்.

***************************

தொடரும்.

29.3.10

சொல்லுவதெல்லாம் பொய் 8

அந்தரச் சொல்லொன்றில் மெல்லிய நூல்கட்டி தொங்கவிடுகிறேன் என்னை. குன்டூசல் போல குறிப்பிட்ட இடைவெளியில் சோர்வுறாமல் இடமும் வலமுமாய் ஆடும் என்னை குறிவைக்கின்றன உனது நிதானமும் துரோகமும். கடக்கிறது காலம் 'கலுக்.. கலுக்' என்கிற மெல்லொலியில். தப்பப்போவது இல்லை இம்முறை இரண்டு குறிகளும். இடப்பக்கம் நான் வர உன் நிதானம் என்னை வீழ்த்தும். வலப்பக்கம் நான்வர உன் துரோகம் என்னை வீழ்த்தும். என்னால் செய்யமுடிந்ததெல்லாம் என்னை இரட்டை இலக்காக உன் முன் நிறுத்தியதுதான். இரண்டு இலக்குகள். இரண்டு வீழ்ச்சிகள். ஒரே நேரத்தில். அச்சம்.

குறுக்குச் சுவர்மீது குறிப்பிட்ட வீசை எடைகொண்டு பொன்வண்ண வரிகொண்ட வெளிர்சாம்பல் நிறப்பூனை எதிரெதிர் திசையில் நடக்க எனது ஒவ்வொரு விழியும் தனித்தனியாக அவற்றை பின்தொடர்வதை அறிகிறாய் வெயிலொழுகும் பகல் ஒன்றின் மத்தியில். சமநிலை இழந்த என் கால்நடை பிறழ்ந்து கீழிறங்கி செல்லுகிறேன் தனிமை வழி. மௌனம்.

நீர் வராக்குழாயடியில் அதே பகலில் வெற்றுப்பானையுடன் நிற்கும் தாவணிப்பெண்ணின் வியர்வைக் கோடுகள் போல திசையறியாது வழுக்கியோடுகிறது என்னுள் உனதான கூர் அவதானிப்புகள். கூரைமீதேறி நிற்கிறேன். வழியும் சொட்டுகள் ஈர்க்குச்சி முனைகளில் நிதானமாக சேகரமாகின்றன. ஊறும் அரவத்தின் அதிர்வு போதும் சொட்டுகள் உதிர. விழுகிற ஒவ்வொரு துளியும் வெற்றுப்பானையில் நிரம்பினால் சாந்தமடைவேன் என்கிற உன்னிடம் சமர் ஒன்றுமில்லை. அமைதி.

****************************************************

மழைபெயர்ப்பு. ஒரு நிராதரவான வேளையில் நீ என்னை கொல்ல உத்தேசித்திருப்பதாக ஒற்றனின் கூற்றை கருமேக நடுவில் சமிக்கையாக நான் கண்ட பொழுது வீழ்கிறது மழை.

கொலை என்பது ஒரு எளிமைகூடிய வீகரமான தாதுப்பொருள் என்பதையோ அது எல்லாவற்றிற்குமான ரசாயன மாற்றத்தின் மூலப்பொருள் என்பதையோ அறியாத என் அறியாமையை கழுவித்துடைக்கிறது இந்த மழை.

அகன்றுவிட்ட அறியாமையின் முதல்தாகம் குருதிஎன்பதை உன் விபூதியும் வவ்வால்கழிவும் கலந்த சுகந்தம் எனக்குணர்த்துவதை மறைக்காமல் என்முகபாவத்தை மணலள்ளி பூசுகையில் மீண்டும் கழுவி வெளியேற்றுகிறது மழை.

வாய் நிறைய குருதிவழியும் ஓநாயின் படமொன்றை ஒற்றனின் சட்டைப்பையில் திணித்து கழுத்தறுத்து கொல்கிறேன் அவனை உன் பார்வைக்கு படும்படிக்கு. வழிந்தோடும் திசையனைத்தையும் என் இருப்பின் பாதைகளாக மாற்றுகிறது எனை நோக்கி நீ வர, தோதாக மழை.

வா. இம்மழை என்னுள் வெளியேற்றும் வெக்கையை எனைக்கொன்று அடக்கு. பின்னும் வா. என்னுடல் தின்ன. என் சாபத்தால் உன் தாகம் தீர்க்க விடாது தொடரும் இந்த மழை.

******************************

மதுவுண்ண தொடங்கி விட்டான் கலிபுத்தன். கோரைப்பற்கள் உதடு தாண்டி நீள்வதை சிரிப்பின் அடையாளமென்கிறான். சுய போதனையில் துப்பும் எச்சிலில் உடையும் ஆடியில் ஆயிரமாயிரம் பிக்குகள் சிரித்து நெளிகிறார்கள். உடல் கூசி விஹாரம் நுழைந்து யசோதரையை கொல்கிறான் மீண்டுமொருமுறை. தலைக்குமேல் கைகளை தூக்கி கும்பிடும் அவனது விலாவில் முளைத்த வேனல் கட்டியில் குவிகிறது உயிர். ரணம் குணமாகும் மருந்தென காரணம் கண்டடைகிறான். இந்த எளிய புத்தன் மதுவுண்ண தொடங்கிவிட்டான் மீண்டும். கலிபுத்தன்.

பாவம் சரணம் கச்சாமி....

போதம் சரணம் கச்சாமி...

மரணம் சரணம் கச்சாமி...

*******************************

26.3.10

பச்சையிலை.

பால்யம். அடைகாக்கும் காக்கைச்சூட்டில் வெளியேறும் குயில். நிராதரவான பகலுக்கும் நிர்பந்தமற்ற இரவுக்கும் இடையில் அது கூவுகிறது. திறக்கிறது உயிர். அதன் மரத்தில் காற்றுக்கு நடுங்குகிறது இளம்பச்சை இலை. உதிரும் போது காற்றில் நடுங்குகிறது இலை. வீழ்ந்த நதியில் இலையை நடுங்கச் செய்கிறது ஓடும் நீர். மழையில் துவளும் போதும் நீரில் அமிழும்போதும் நடுக்கமடங்குகிற இலையில் முதிர்கிறது பச்சை.

நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் மணிக்கட்டில் வைத்து வித்தைக்காட்டும் அண்ணனின் விரல்கள் பார்த்து வியக்கிறாள். அடர்வெளிச்சத்தில் விரிகிறது கண்கள். காணாமல் போன பந்துக்கான அழுகையை மறந்து வைக்கிறாள். உருட்டி கொடுத்த சோற்றை கையில் வாங்கி மீண்டும் தட்டில் வைத்து பந்து கேட்டு அழத்தொடங்கும் தங்கையின் அறிவை வியக்கிறான்.

தாத்தாவிடம் தான் தனது முதல் நடையை செய்து காண்பித்தான் தம்பி. வாரியணைத்த தாத்தாவிடம் மீண்டும் நடக்கவிடுவென சொல்லி பூரிக்கிறாள் பாட்டி. தெருப் பெண்களை மாட்டுவண்டியில் அமர்த்தி மாட்டுகாரவேலனைப் பார்க்க போன தாத்தாவின் உருமாளில் சொக்கிய பாட்டிக்கு பதினாலாவது பேரன் தம்பி. எளிமையாய் கடந்தது அவர்களின் மரணம் துளி கண்ணீரில்லாமல்.

ஊதாப்பூ மொக்கவிழ்வது போல விரிகிறது. உதிர்கிறது அந்தியில். அதன் மணம் நீர் தின்ற புழுதியின் வண்ணம். நின்ற மழை பெய்யும் பொருட்டு நிமிர்கிற நேரத்தில் சருகான இலையின் பச்சையில் கூடியிருக்கிறது கருமை. பால்யம்.

**********************

நூறாவது பதிவு. அய்யோடா..!

**********************

உங்களுக்கு என்ன பிரச்சனை?


*****************
தலைப்புக்கு முன்:

இன்று எனக்கு வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. அனைத்து வாழ்த்துகளையும் பத்மாவின் தளத்தில் சொல்லி என்னை பரவசப்படுத்தியிருகிறீர்கள். நன்றி..நன்றி.. நன்றி.
*****************
பிறகு:
தலைப்பை மீண்டும் படிக்கிறேன். இந்த கேள்விக்கு என்ன அர்த்தம் என தெரியாமல் விழிக்கும் என்னை ஏலனப்படுத்துகிறது துயருத்தும் வாழ்வு. வேதனை. தெரிந்த உண்மைகளுடன் வாழும் துயரம் எனக்கு சாபமாக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சொன்ன வான்கோழி கதை: உலகின் மிகச்சிறந்த தாய்மை வான்கோழி. தனது குஞ்சுகளை காப்பதிலும் அன்பு செலுத்தி அரவணைப்பதிலும் நிகரில்லாதது. கீ கீ எனும் குஞ்சு என்றால் அதற்கு உயிர். பாருங்கள் நண்பர்களே... அந்த குஞ்சு கீ கீ என மட்டுமே கத்தவேண்டும். அது அப்படி கத்தாமல் ஊமையாக இருந்தாலோ கீ கீ என கத்தாமல் வேறு ஒலியில் கூவினாலோ அந்த அன்புத்தாய் தன் குஞ்சை கொத்திக் கொத்தியே கொன்றுவிடும். புரிகிறதா... அந்த தாய்க்கு குஞ்சென்றால் கீ கீ என கத்தவேண்டும்.. இல்லையென்றால் அது குஞ்சு இல்லை. குஞ்சு அல்லது குஞ்சு இல்லை! இதுதான் அதன் புரிதல். பைனரி.
நீதி: வான்கோழிதான் பைனரி! மனிதன் அல்ல. men are multiple. women are multiple and infinity.
****************
கடந்த சில தினங்கள் எனது வாழ்வின்மீதான மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்த வேண்டிய தருணங்களைத் தந்தது. கடுமையான மனஅழுத்தத்தை அளித்த இந்த அனுபவத்தை கதையாக்க எண்ணம். பார்க்கலாம்.
*********************
ஆணி என் நடுநெற்றியில் நுழைய உன் சுத்தியலின் ஒற்றை அறைபோதும். ஏனித்தனை முறை. கபாலம் பிளந்து தெறிக்க நீ துப்பும் ஒற்றை வார்த்தை போதாதா.
****************

15.3.10

ஆளுமைகள்

Mr. BT
வாருமையா பி வீ.. சௌக்கியம்தானே.. ஊனு எடுத்தாச்சோ? பாத்து பலவருசம் ஆகுதே. எப்பிடியிருக்கு நம்ப ஜனங்க நெலை.. எல்லா பயல்களும் பெசிவேச்சமாதிரி ஆயிட்டனுங்கோ.. அப்ப நாம நெனச்சது சரிதானடே...

Mr. BV
நோ நோ மிஸ்டர் பி டி.. நான் பொதுவா என்னோட நாட்டு உணவு பொருள்கள் அடங்கின வேஸ்டேஜ.. முக்கியமா அதனோட காலை உணவு பழக்கங்கள நான் தொடுறதே இல்ல. புல்ஷிட்.. நானே சமைக்கிறேன்.. யு நோ .. நான் ஆலிவ் ஆயில்தான் உபயோகிக்கிறேன். . காலையில ப்ரீ டாய்லேட் தான் எனக்கு குறிக்கோள்.
Mr. BT
என்னடே உனக்குன்னு என்ன ஒரு நாடு இருக்கு எழவு.. நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்லுத.. இதபாரு பலவருசத்துக்கபுறமா நாம இதே நாளுல பாத்துக்கிடனும்னு பேசிகிட்டோமில்ல.. அதுக்காகத்தானே இப்போ ஏகப்பட்டபேர ஏமாத்தி யாருக்கும் தெரியாம இங்க வந்திருக்கேன்.. எப்படி போகுது நாம செஞ்ச யோசன..

Mr. BV

மேன்.. அதுக்காக நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்சமா.. என்னோட வேலையை பிடுங்கினது கூட எனக்கு கோவமில்ல .. எம்பையன் என்னை போடா தேவிடியாப் பையான்னு திட்டுனது கூட எனக்கு கோவமில்ல.. நான் .. நானே எழுதுன எல்லாத்தையும் நான் எழுதலன்னு சொல்லிகினு திரியுறாங்களே.. அவங்க அம்மாக்கள என்ன செஞ்சா தகும்..
Mr. BT
அதுக்காகத்தான் இவங்கள சுலபமா திசைதிருப்புற வழிவகை ஒன்ன கோதாவரி தாண்டி இல்ல தாண்டாம மேற்கு மலை தொடர்ச்சி முடியுற இடத்துல ஒரு வெள்ளைக் கல்ல கண்டுபிடுச்சு அதுக்கடியில முன்னூறு நாலு தியானம் பண்ணினேன்.. அந்த சோர்வுலதான் என்னோட ஆயிரம் பக்க நாவல எழுதினேன்.. அதுக்குப்பிறகு நா சிறுகதைகளை எழுதுன மகத்தான செயலையும் .. இரண்டு சிறுகதைகளுக்கு நடுவுல என்னோட மண மற்றும் மன நிலைய சமன்செய்ய நாவல்கள எழுதவும் தொடங்கினேன்.. பின்னால நான் என்னை உற்சாகப்படுத்தவும் நான் மொத்தமா எழுததொடங்கிட்டேன் ... மொத்தத்துல..
Mr. BV
.. நிறுத்து மேன்.. இன்னும் நீ பதினஞ்சு மார்க் பதில் சொல்ற பழகத்த விட்டு தொலைக்கலையா.. அவனவன் ஒன் வோர்டுக்கு மாறி இப்போ ட்வீட் வரைக்கும் வந்துட்டானுங்கோ.. நானும் அந்த சமயத்தில சீனா லேர்ந்து ஷெலே வரைக்கும் பலவித கலாச்சாரங்கள்ள புகுந்து திளச்சு.. கடைசியில இப்போ மலையாளம் கத்துக்கினு இருக்கேன்..
.....................

இவர்களைப்பற்றி எதுவும் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஆளுமைகள். புத்தகம் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இவர்களிடமிருந்து எதுவாவது கிடைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களைப்பற்றி வெகுஜன ஊடக வடிவிலான ஒரு கற்பனை உரையாடலைத் தொடங்கினேன். இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசினால் எப்படியிருக்குமென்று. சுவாரஷ்யமாய் இருந்தது. ஆனால் தொடரப் பிடிக்கவில்லை. இது ஆரோக்கியமாக படவில்லை.
***********************
ஜெயமோகனின் சில சிறுகதைகளும், விஷ்ணுபுரம், கொற்றவையும் ஏழாம் உலகமும் தமிழுக்கு கொடைசாருவின் சிறுகதைத்தொகுதியும், ராசலீலா நாவலும் இதே தமிழுக்கு கொடை. எழுத்தாளர்களுக்கு தற்பெருமை அடிப்படை குணம். இவர்களின் தம்பட்டம் அவ்வாறானதே. இந்த எழுத்தாளுமைகள் - அனைத்து எளிய மனிதர்களை போன்றே - மதிக்கப்படவேண்டியவர்களே. என்னைப்பொருத்தவரையில், வரலாறு தொன்மம் போன்றவற்றை தேடி கொள்ள ஜெயமோகன் சிறந்த வழிகாட்டி. உலக எதிர்கலாச்சாரம், திரைப்படம் போன்றவற்றை தேடி கொள்ள சாரு. ஆக, ஜெயமோகன் ஒரு biological typewritter. சாரு நிவேதிதா ஒரு biological vibrator.
*****************

வழை

நண்பர் சுரேஷ் தனது நண்பருடன் பேசும்போது வலைப்பதிவர்கள் பற்றிய ஒரு கருத்தை விவாதித்ததாக சொன்னார். அதன் சாரம் ஒரு கேள்வியாக இருக்கிறது. வலைப்பதிவில் கருத்துக்களைப் பதிவதற்கும் பகிர்வதற்கும் கட்டணம் வாங்கினால் எத்தனைப்பேர் பதிவுலகில் தங்கள் எண்ணங்களைப் பகிர்வார்கள்? முக்கியமான கேள்விதான் இல்லையா ? வலைப்பதிவர்கள் இணைய வலையில்/வளையில் இரண்டுவிதமாக மாட்டிக்கொள்கிறார்கள் என்று படுகிறது. இலவசமாய் பதிவுவெளியை அளிப்பதின் மூலம் சர்வதேச நிறுவனங்கள் விரிக்கும் வலை ஒன்றிலும், தொடர்ந்து பதிவு மற்றும் பகிர்வு செய்வதில் கிடைக்கும் மனச்சுகிப்பிற்கு ஒன்றிலுமாக. இத்தகைய பதிவுவெளி சேவை இலவசமாக கிடைக்காவிட்டால் நாம் எத்தனை பேர் கைக்காசு செலவு செய்து நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்?

பதிவு வழக்கம் மெல்லியதொரு போதைப்பழக்கமாக உருவகிக்க தொடங்குவதை பதிவர்கள் கண்டுகொள்ளக்கூடும். முதலில் எண்ணத்தைப் பகிர நல்ல களமாய் இருக்கும் இவ்வெளி தன்னை இட்டு நிரப்ப ஏதேனும் ஒரு கருத்துக்கும் அதன் தொடர்ச்சியாக ஒரு சார்புக்கும் பதிவர்களை நிர்பந்திக்கிறது. இச்செயல்பாடு படிப்படியாக நிகழும். ஒருவரின் வேலை மற்றும் சூழல் சார்ந்தே இதன் தன்மை காலவெளியை எடுத்துக்கொள்ளும். ஆனால் தொழிநுட்ப யுகத்தில் நாம் இதிலிருந்து தப்ப முடியாது.

ஏற்கனவே நமது பருண்மையுலகில் இணையத்தின் வழியாக ஒரு பிரபஞ்ச வெளியைப் போன்ற தன்மையில் ஒரு மாயச்சமூகம் மனித எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டு விட்டது. நாம் நமது சமூகத்தில் ஒரு உறுப்பினர் போன்றே இந்த மாயச்சமூகத்திலும் உறுப்பினர்கள். நமது கட்டற்ற எண்ணங்களை மிகச்சுலபமாக பரப்ப முடிகிற வெளியாய் இது தன்னை தொடர்ச்சியாக விரிவு செய்து கொள்கிறது. அதைவிட ஒரு சிறப்பம்சம் உண்மைச்சமூகத்தில் ஒரு தனிமனிதனுக்கு சாத்தியப்படாத பன்மை நுழைவுத்தன்மை இந்த மாயச்சமூகத்தில் சாத்தியமாகிறது.

அதாவது, ஒருவர் இச்சமூகத்தில் எத்தனை பேராகவும் உறுப்பினராக்கிக்கொள்ளலாம். அனாலும் இது உண்மைச்சமூகத்தின் ஒரு புள்ளி மாற்றமற்ற மாயப்பிரதியாக மட்டுமே இருக்கிறது. மொத்தத்தில் ஒரு தனியறையில் தன்னை யாரும் கவனிக்காத நேரத்தில் ஒரு தனிமனிதன் செய்யும் அத்தனைக்காரியங்களையும் எல்லாம் அறிகிறபடி தன்னை யாரென்று வெளிக்காட்டிக்கொள்ளாமல் செய்வதற்கான சாத்தியப்பாடுகளை இவ்வெளி நமக்கு அளிக்கிறது.

என்னவொரு பயங்கரம்!

***********

வலை/வளை இரண்டு வார்த்தைக்குப் பிறகு 'வழை' என்கிற வார்த்தை இருக்கிறதா என்று தேடினேன். இருக்கிறது. வழை என்றால் இளமை என்ற ஒரு அர்த்தமும் புதுமை என்ற ஒரு அர்த்தமும் இருக்கிறது வர்த்தமானன் தமிழ் - தமிழ் அகராதியில்.

********

12.3.10

தானமடைகிறது நிர்வாணம்.

தானமிடும் மனிதன் தன்னை தேவனென கொள்கிறான்.


கண்மூடிய இமைவழி தெரிகிறது தகிப்பின் சிவப்பு. ரசமிழக்கும் ஆடியின் முன் என்ன செய்துவிட முடியும் வெப்பமூச்சு. கருகி அழிகிறது தனித்தலையும் இரட்டைவால் மிருகம். பொறி தேடும் பறவையிடமிருந்து கூண்டை மறைக்கிறான் வேடன். பாழடைந்த காட்டில் ஒற்றையடிப்பாதை ஒன்றை கண்டுபிடிக்கிறான் அகழ்வு செய்பவன். தங்கக்குழம்பின் ஊற்றுவழிஎன கொக்கரிக்கும் அவன் சர்ப்பதோஷம் பெற்று வீழ்கிறான் முதலடியில்.


தானம்பெறும் மனிதன் தன்னை பாவமெனக் கொள்கிறான்.


காற்றின் குளிர்பெற்று ஊற்றுகிறது மேகம். இரவு. இருள். காடு. குளிர் பொறுக்கா ஒளிதேவதை சிலந்தியின் கூட்டில் தஞ்சம் கேட்கிறாள். இரைகளுக்கானது அதன் கூடு. இறக்கம் கொள். மழைத்துளி ஆகிவிடு. இருண்டவனக்கிளையில் பனித்துளியில் தன்னை ஒளித்துக்கொள்கிறது ஒளி.


*************************



wrong

"there should be somethin wrong..." என்றான் அவன்.
"there should be somethin wrong..." என்றாள் அவள்.
"there should be somethin wrong..." என்றது அது.
"where" என்றேன் நான்.
"there" என்றாய் நீ.

................வேறொன்றும் இல்லை நகுலனை மீண்டும் எடுத்தேன்.

********************

இரண்டு நாவல்கள் ஒற்றை மூச்சில் படித்தேன். மீண்டும். ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு மண்ணாய் இருந்திருக்கிறேன்! (இப்ப மட்டும்..?) இப்போதைய என் இருப்பை ஒரு கேலியாக்கி, அற்பத்தின் அற்பமாக்கி, திருவிழாக்கூட்டத்தில் துணியற்றவனாக்கி .... ன்னும் என்நெல்லாமொவாக்கியது அப்புத்தகங்கள். படித்துமுடித்த கணத்தில். இப்பொழுது இந்த மனநிலை இல்லை. பரபரப்பு அடங்கி நிதானமாகிவிட்டேன். ஒரு மனதின் கற்பனைசக்தியை, அந்த கற்பனை மூலம் ஏற்படும் பரவசத்துடிப்பை வாசகனுக்கு பரிமாற்றம் செய்வதில் ஒருநூலும் மனிதர்களின் சாதாரண உறவுமுறைகளில் கீழ் மற்றும் உள் அடுக்கில் நிகழும் மன உரையாடல்களை ஒரு மூன்றாம் ஜாம நாய் குரைப்பு போல குரூரப்புதிர் வழி வெளியேறும் வார்த்தைகளைக் கொண்ட மற்றொரு நூலும்.

நித்தியகன்னி - எம்.வி.வெங்கட்ராம்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

படித்து துன்புறுங்கள் நண்பர்களே.
****************

10.3.10

சொல்லுவதெல்லாம் பொய்

***************

நாட்குறிப்பில் மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதத்தில் சிதறலாய் கிடந்த எழுத்துக்கள். இவ்வரிகளில் சன்னாசியின் கையெழுத்து மாதிரி இல்லாத சில குறிப்புகளை ஜாதகக்காரர் எழுதியிருக்கலாம் அல்லது அங்கயர்கன்னியாக கூட இருக்கலாம்.

**********************

......... ஒரு மடையனுக்கு.... இல்லை ... ஒரு மடையனின் எழுத்துக்கள் யாருக்கும் புரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களுக்கு தெரியாத ஒன்றை அவன் எப்பொழுதும் உளறிய வண்ணம் உள்ளான். கேள் நண்பனே .. பொருளும் காமமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உச்ச இன்பமும் பணமும் அவற்றின் மீச்சிறு அலகுகள். அதிகாரம் பாலுணர்வையும் பணத்தையும் கண்ணாடித்துண்டுகளாக அரைத்து ஆசையென்னும் சாட்டையில் பூசியிருக்கிறது. வாழ்வெனும் ஒளி அந்த சாட்டையின் கண்ணாடிக்கலவையில் ஒளிர்கிறது. தொடர்ந்து அது மனித பூச்சிகளை தன்பால் இழுக்கிறது. மனிதனின் பிரக்ஞையால் உருவாகும் அதிகாரம் சூழலலால் நெய்யப்பட்டிருக்கிறது. இங்கு நிலவும் சூழல் தற்செயல் அல்ல. அதன் ஒவ்வொரு கண்ணியும் துல்லிய முன்வரைவுகளால் ஆனது. நிகழ்தகவின் விளைவுகளையும் தற்செயல் தன்மையையும் ஆளுமை செய்யும் அளவுக்கு நாம் பயங்கரவாதிகள் ஆகிவிட்டிருக்கிறோம். நமது விஞ்ஞானகூடங்களில் இயற்கை செயற்கையாக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. .............................................


அதுசரி.. எதற்காக இப்படி எழுதுகிறேன்?
************

நிராதரவற்ற இவ்வேளையில் இருப்பு அர்த்தமற்றது என கொள்ளவேண்டாம் சன்னா. உற்றுநோக்கப்பட்ட ஒரு காட்சியாவது நேசம் மிக்கதாக இருக்கும். ஒருவேளை தனனைத்தானே முழுவதுமாக அழித்துவிடவும் கூடும். நிராதரவு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். பின் எப்போதும் உன் சுயம் குற்றவுணர்வு கொள்ளத்தொடங்கலாம். எனவே, சன்னா.. தேவையற்ற கணம் என ஒன்று கூட இல்லை. எதிர்மாறாக ஒவ்வொரு கணமும் தேவையற்றதாக இருக்கலாம். சாத்தியப்பாடுகள் பற்றி நாம் பேசத்தொடங்கினால், நாழிகை கழிவதே மீதம். மூச்சிழுத்து வெளியேற்றும் ஒவ்வொரு முறையும் நீ வாழ்கிறாய். உன் உடல் முழுதும் குருதி இளஞ்சூட்டுடன் பாய்ந்தலைகிறது. நீ பசியுணர்வாய். பசியடக்கும் ஒவ்வொரு கவளமும் உன் மனக்கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்படும். உன்காமம் பசித்த வேங்கை போல குகை விட்டு வெளியேறும். இரை வேண்டி காடதிர உறுமும். அழியும் வரை காத்திருக்கப்போகிறாயா. மொத்த விசும்பும் ஒவ்வொரு மரணத்தோடும் மடிகிறது. வேறொரு இருப்புக்கு வேறு விசும்பு இது. மீண்டும் கேள்.. ஒவ்வொரு மரணத்திலும் முற்றும் முழுவதுமாக அழிந்துவிடும் இயக்கமிது. உனக்கிருப்பது இறந்தவனுக்கு இல்லை. மரணத்திற்கு நீ இருக்கிறாய். உனக்கு மரணம் இருக்கிறது. இறந்தவனுக்கிருப்பது உனக்கில்லை. பின் என் உன்னதம் மற்றும் உன்னதமின்மையைப் பற்றி போகம் கொள்கிறாய். கவனம். நான் யாரென்று உனக்குத்தெரியும். நீண்ட காலவெளியின் அனுபவம் எனக்கு உண்டு. நம்பிக்கைன்மையின் பெருந்திரள் நான். புணர்ச்சி யோகம். மெல்லிய தோல் கொண்டு என் ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. என் இருப்பு குற்றம். அது உன்னை கூசச்செய்யும். பேராபத்தின் குழந்தை நான். வேங்கையென உருவகிக்கும் இச்சை நான். என்னைக் கொல்ல உனது கற்கால ஆயுதம் போதாது. என்னைக்கொல்ல தந்திரமான ஆயுதம் தேடாதே. எளிமையாய் எதிர்நில். ஒரு வேளை அது உனக்குள்ளே இருக்கலாம். உபயோகிக்கத் தெரிந்தவனின் ஆயுதம் அடிமையென இயங்கும்.

*********************

மேகங்களின் அமைப்பை வரைமுறைப் படுத்தும் சாத்தியமின்மை தெரிந்தே வானம் பற்றிய குறிப்புகளை தொடங்குகிறேன். நிலக்காட்சியை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத வானம் ஒரு குட்டைநீரில் அடங்கிவிடும் என்பது வெறும் காட்சி தர்மம். புல்நுனியில் தொங்கும் ஒரு சொட்டு பனித்துளியில் நுழைந்துவிடும் மலையைப்பற்றி வானம் எப்பொழுதும் கவலை அடைவதில்லை. தன்னளவில் பெரிய வெளியை உருவாக்கி அதன் விளிம்புகளில் மேகங்களை அனுமதிக்கும் வானம் மேகத்தாலானது என சொல்வதற்கில்லை. பின் எப்படி மேகங்களின் அமைப்பை வானம் ஆளுமை கொள்ளும். இன்றைய மேகம் ஒரு ஐரோப்பிய பெண்ணாய் மருவி மிதிவண்டியை ஓட்டிக்கொண்டிருந்தது. அவள் கருநீல நிறத்தாலான பிரில் வைத்த அகன்ற பாவாடையும் பொழிவான வெண் சட்டையும் அணிந்திருந்தாள். தனது மிதிவண்டியில் முன்கூடையில் சில பூக்களை வைத்திருந்தாள். கணக்கரைவில் அவள் மீண்டும் வகையறியா மேகமானாள். பின்பு அவளைக் காணவில்லை. நான் மட்டுமே அங்கிருந்தேன். என் விளிம்பில் இனி அவள் வர வாய்ப்பில்லை. துக்கம் உள்ளது.

***************

கண்களை மூடி தன்னைத்தானே பலமுறை சுற்றினால் திசை மறக்கும் மீண்டும் கண் திறக்கும் போது. ஆனாலும் சொற்ப கணங்களில் மூளைஅடுக்குகள் மீட்டு விடுகிறது திசையறிவை. அவ்வளவு சுலபமாக அமைந்துவிட்டது இருப்பிடங்களின் தகவமைப்பு. பிரிதொருநாளின் கனவில் பெரும்பறவையொன்று என்னை தூக்கிப்பறந்தது. பதினோரு மலைகள், நான்கு பள்ளத்தாக்குகள், ஒரு பாலைவனம் மற்றும் முப்பத்துஏழு ஆறுகள் கடந்து ஒரு சிறிய கடலுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது என்னை. மூவுலகமும் அறிந்தது எனது நீச்சல் திறன். மேற்குலகில் வண்ணத்திப்பூச்சி வகையும் கிழக்கில் மல்லாந்த வகையும் மத்தியில் எனது மிதத்தல் வகையும் பெருமை. ஆனால் இது கடல். சமுத்திரங்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்டது. பாதைகள் நிரம்பியது. கடல் அப்படியல்ல. பெரும்பாலைவனம் ஒன்றின் தண்ணீர் திரிபு. திசைபற்றிய அறிவுமட்டுமே ஒரு நீச்சல்காரனின் பாதுகாப்பு. உணவு தேடும் சில சுறாக்களுக்கு என்னைப்பற்றிய அக்கறையில்லை என்பது எனக்கு பயத்தை அளித்தது. மேலும் திசையறிய ஒற்றைச் சூரியன் போதுமான பகல் அப்போது இல்லை. வெளுத்துக்கிடந்த அலையும் மீன்கள் சூரியன்படாத தகவலைச் சொல்லித்திரிந்தன. செய்வதறியாது மல்லாந்து மிதக்கத்தொடங்கினேன். நேர்பார்வையில் ஒரு கோடியே நாற்பத்து ஏழு லச்சத்து தொண்ணூற்று நான்காயிரத்து எண்ணூற்று ஐம்பத்தாறு விண்மீன்கள் தெரிந்தது. இவற்றில் எது என் திசை காட்டும். திசை பற்றிய அறிவு பார்வைக்கா புலனுக்கா. ஒரு சுறா என்மீது உமிழ்நீரை துப்பியது. தலைக்கனம் பிடித்த சுறாக்களின் மத்தியில் வாழ்வது இவ்வளவு சுலபமா என்ன. வெறும் உமிழ்நீரை தாங்கும் சக்தி மட்டும் போதுமா. கடல் நீரே அதை கழுவியும் சுத்தம் செய்கிறது. திசையறிய இச்சுறாக்கள் உதவுமா தெரியவில்லை. மீண்டும் விண்மீன்களை பார்த்தேன். அதிசயம். இடம் மாறியிருந்தன அவைகள். முதலில் இருந்ததும் இல்லாமல் இருந்தது. மூன்று லட்சம் விண்மீன்கள் காணாமல் போயிருந்தன. பதிலுக்கு மூன்றேமுக்கால் லட்சம் விண்மீன்கள் வேறு இடத்தில் தோன்றியிருந்தன. விளையாட்டு அற்புதமாய் இருந்தது. நீண்ட களைப்பிற்கு பின் ஒரு நிலைத்த தொடர்ந்து மாறாத ஒற்றை விண்மீனைக் கண்டுபிடித்தேன். திசை பற்றிய முதல் ரேகை.

**************

வண்ணத்துப்பூச்சி நீச்சல் அடித்து வெளியேறினேன்.

**********************

மித்ர..........

****************

ஒரு துயர்கொண்ட முரட்டுப்பாடல் தனதான ஒலிச்சமிக்கைகளை ஒளித்துவைக்க சதா முயல்கிறது. தன்னிடமிருந்து தெரியாமல் வெளியேறும் கூர்ப்பல் ரீங்காரங்களை அது கட்டுப்படுத்த முயன்றும் சதா தோற்கிறது. தனது ஒலிகளின் கூர்முனைகள் கேட்பவர்களின் செவிப்பறையை கிழித்துவிடுமென எல்லோரிடமும் எச்சரிக்கை விடுகிறது. அதன்பொருட்டே அக்கூரிய ஒலிகளில் ஏற்படும் ரணத்தை தானே ஏற்றுக்கொள்வதாக சமாதானம் செய்கிறது. எனக்கு அந்த துயர்கொண்ட பாடல் பார்க்கக் கிடைக்கிறது. அது என்னை நிர்வாணம் ஆக்குகிறது. வெளியெல்லாம் என்னை கூசி அலையச்செயகிறது. அது என் பெருவிருப்பமாய் வேறு இருக்கிறது. தன்னை துயர்கொண்ட பாடலாய் உருவகிக்கும் அது உண்மையில் ஒரு நீண்ட நதி. ஏற்கனவே சமைக்கப்பட்ட பாதையில் நிதானம் தவறாமல் ஓடி கடலைடையும் ஒரு அமைப்பு. ஆனாலும் அது ஒவ்வொரு முறையும் ஒரு எளிய கூலாங்கல்லில் இடறி தனது சமனை இழக்கிறது. இடறி விழும் ஒவ்வொரு முறையும் அது தன்னை துயருற்ற பாடலாக உருவகிக்கிறது. எப்பொழுதும் போல் நான் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்கிறேன். இம்முறை சற்று திகைப்படைந்துள்ளேன்.

*************

9.3.10

பிணக்கில் சென்ற கடவுள்

கடவுளைப்பற்றி எழுதத்தொடங்கினேன். கடலாழத்தின் அழுத்தமும் உப்புச்சுவையும் தொடுவானத்தையும் படைத்தவர் அவர். பறவைகளின் ஒளிச்சிதறல் பரவும் பெருங்காடுகளைப் படைத்தவரும் கூட. பனித்துளி சர்ப்பவிசம் மனிதர்கள் நாக்கு மூங்கிலிசை வசைச்சொல் மற்றும் எல்லாவற்றையும் படைத்தவர் அவரெனக்கொள்ளலாம்.மேலும் அவரைப்பற்றி எதைச்சொன்னாலும் பழையதாய்ப் போய்விடுகிற அவஸ்த்தை. தவிர, பசியின்மை தாகம் புல்வெளி மரணம் எதையும் விட்டுவைக்காத காமம்... எழுதுவதை நிறுத்தி எதை எழுதாமல் விட்டுவிட்டேன் என்றெண்ணியவாறு மீண்டும் வாசிக்க எழுதியதெல்லாம் ஒரு சாதாரண முத்தம் பற்றிய குறிப்புகள் என உணர்தபோது கடவுள் தோன்றி சிரித்து மறைந்தார்.

*********

தன்னைத்தனே முத்தமிட்டுக்கொள்ளும் ஒரு பிரார்த்தனை வடிவத்தை அனுமதித்த கடவுளை இன்று பெய்த மழையின் லேசான மண்வாசனையோடு நிபந்தனை ஏதுமில்லாமல் மன்னித்தேன். பிழைத்துப்போன கடவுள் முத்தவண்ண ஓங்காரத்தை இடியாக்கி எனக்கு பரிசளித்தார்.

********

மாலையொன்றின் முடிவில் எரிச்சலுடன் விடைபெற்றார் என்னிடமிருந்து கடவுள். என்னைப்போலவே அவருக்கும் வருத்தமில்லை. வருத்தமெல்லாம் முத்தமிட்டு விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் தவறவிட்ட முத்தத்தை இருவரும் பிடிக்கச்சென்று மீண்டும் தவறவிட்டோம் என்பதாலும் உடைந்த முத்தத்தை அவரால் மட்டுமல்ல என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான்.

*********

தலைதெறிக்க ஓடிவந்த கடவுளின் தொண்டை வறட்சிக்கு நீர் கொடுத்து என்வென்று கேட்டேன். தாகமடங்கி நிதானமான அவர் என்னைப்பார்த்து சிரிக்கத் தொடங்கி நிறுத்தினார். அழத்தொடங்கி நிறுத்தினார். பேசத்தொடங்கி நிறுத்தினார். என்னசெய்வது என்று திகைத்து அதை மறைக்கத் திரும்பி நிறுத்தினார். பின்பு மெதுவாய் என்னிடம் நீ கேட்ட கேள்விக்கு என்னாலான பதிலைத் தேடிவிட்டேன். ஒரே பதில்தான். முத்தம் முத்தத்தால் மட்டுமே ஆனது என்றார். பின்பு சென்றுவிட்டார்.

***********

ஆதி சூட்சுமம் அறிந்த உனக்கு இனி நான் துளியும் தேவையில்லை என்றார் கடவுள். சற்று நேரம் அமைதியாய் இருந்து பின்பு ஆரத்தழுவி மொத்தமாய் என்னிடமிருந்து பிரிவதாய்சொல்லி புறப்பட்டார். எனக்கு வருத்தமில்லை. இன்று காலையில்தான் தெரிந்து கொண்டேன் அனைத்து முத்தங்களின் மறுபக்கங்களிலும் இருக்கும் அவரது இருப்பிடத்தை. எனக்கு தெரிந்துவிட்டதால் ஏற்பட்ட வெட்கவுணர்வால்தான் பிரிகிறார் எனத்தெரிந்து என்னவொரு குழந்தைத்தனம் என வியந்தேன். பின்பு என் நெஞ்சு நெற்றி புஜங்கள் தொட்டு என் வலது ஆட்காட்டி விரலை கேள்விக்குறி போல வளைத்து அதன்மேலோர் முத்தமிட்டுக் கொண்டேன்.

**************************************

8.3.10

பகிர்வு

மகளிர் தினம்!

எனக்கு இது ஒரு தனிப்பட்ட சிறப்பு தினம் கூட. எனது துணைவியாரின் பிறந்த தினம். அவர்களுக்கு ஒரு வாழ்த்து.

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ! பெண்களைக் கொண்டாடும் ஆண்களுக்கும் வாழ்த்துக்கள்!!

********

இன்றைய தினத்தையொட்டி நான் படிக்க நேரிட்ட மூன்று தினசரி செய்திகள் பற்றிய சிறு பகிர்வு. ஆந்திராவில் என்டியார் ஜூனியருக்கு ஐநூறு கோடி ரூபாய் வரதட்ச்சனை கொடுத்து கூடவே ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள். பாராளுமன்றத்தில் முப்பத்துமூனு சத இடதுக்கீடு மசோதா நிறைவேறினால் அத்தனை பெண்களுக்கு எங்கு போவது என்று எதோ ஒரு பத்திரிகை கவலைப்பட்டிருக்கிறது. சைனாவில் மனைவிகளுக்கு வீட்டு வேலைக்கு கணவன் சம்பளம் கொடுக்கவேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. கேயாஸ் தியரியில் ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திப்பார்க்க அவசியமில்லாமல் தெளிவாக ஒற்றை காரணியாக பெண் இருக்கிறாள். அனைவர்க்கும் அனைத்திலும்! இந்த செய்திகளில் ஒன்று மாநிலம், அடுத்தது தேசம். மூன்றாவது சர்வதேசம். வாழ்க இப்பிரபஞ்சம்!

************

மீடியா வைரஸ்களின் கடுமையான தாக்குதல்களை மீண்டும் நித்த்யானந்தா மூலம் வெளிறிப்போய் அனுபவத்த நம் மகாப்பொது மக்கள் மீது ஒரு கண்ணுக்குக்கு தெரியாத மீடியா வைரஸ் பற்றி சொல்லவேண்டும். அது "பூம் டீவீ" என்கிற பெயரில் அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பதிக்கப்பட்டிருக்கிறது.

************

4.3.10

இருளின் நிழல்


நண்ப
அனைத்தையும் அடக்கியதது. சிறுத்து, கூரிய பார்வை. அகன்று அகண்ட கேள்வி. மாறாத ஞாபகம் மற்றும் சமரசமற்ற பழிகொள்ளும் தன்மை. மிகமிக அழுத்தமான பாதத்தடம். எல்லாமுமாய் எதிர் நிற்கிறது யானையாய். கரியபூனைக்குட்டியாய் நிற்கும் என்முன். இருப்பதோ கவிதை என்னும் சிறிய அங்குசம்.
நண்ப
தற்கொலைக்கு அல்லது கொலைக்கு அல்லது ஒரு நீண்ட ரயில் பயணத்திற்கு அல்லது கடலோரத்தில் சிப்பிகள் பொறுக்குவதற்கு அல்லது சாலையில் கடக்கும் ஒரு நத்தையை கவனிப்பதற்கு என்று சொல்லத்தொடங்கும் முன் கவிதையிருக்கிறது பதிலீடாய் என்கிறாய். அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அல்லது கவனித்துக்கொண்டிருக்கக்கூடும். அல்லது நிச்சயம் அது கண்காணிப்பாய்த்தான் இருக்கும். என்றதனால் கவிதைக்கு பதிலீடாக ஒரு புன்னகை ஒரு முகமன் அல்லது ஒரு பணிதல் போன்ற ஏதாவது ஒன்று மிகவும் நல்லது. அல்லது அவள் பாதத்தில் நீண்ட குளிர்ச்சியான முத்தம் அதனினும் நல்லது.
நண்ப
நாம் சேர்த்துண்ணும் இவ்வினிய வேளையில் ஒரு குவளை சாராயத்தின் தேவை பற்றி தெரிந்து கொண்ட அப்பறவையை நான் நேசிக்கிறேன். மண் குழைத்து உருவாக்கிய குவளையில் திரவம் நிரப்பும்சப்தத்தை எழுப்புகிறது அப்பறவை. நாம் பேசிகொள்வதற்கு இதமான இவ்வேளையை இளக்கமாக்கி சங்கீத நுட்பம் சேர்க்கிறது அவ்வொலி. அறைச்சுவர்கள் கரைய நீர்மீது மிதக்கின்றன நமது நாற்காலிகள். கடல்வெளி ஆகிறது நிலம். படகென நகர்கிறது காலம். காலத்தினூடே பறக்கும் அப்பறவையின் பெயரை விளிக்கிறேன். என்னுடன் சேர்ந்து நீயும் அழைக்கிறாய். எதிரொலியில் அப்பறவை அளிக்கும் பதில் நம் குரலாகிறது. அது கேட்டு சிரித்துக்கொள்ளும் நமது விழிகள் நுகரும் வாசனை சிதைவுகளுக்கானது.

நண்ப

எனது வார்த்தைகளுக்கு உன் உடலிலும் உனது வார்த்தைகளுக்கு எனது உடலிலும் படர்கிறது செதில்கள். வார்த்தைகள் தடித்த பொழுதில் நாம் வெள்ளிச்சாம்பல் நிறக்கடலில் அப்பறவையை மறந்து நீந்திக்கொண்டிருக்கிறோம். தனது மொத்த தாகத்திற்காகவும் நமது நிலத்தில் கொட்டப்பட்ட அக்கடலை குடித்த வெண்கழுத்தும் அடர்தாமிர நிறமும் கொண்ட அப்பறவையின் எச்சம் தழும்பாகி பதிகிறது எனது குதத்தில். சுற்றி வளர்ந்த சுவர்கள் நம்மைச் சூழ்ந்து அறையானதும் உன் கழிப்பறை குழாயில் கசிகிறது அளத்தின் நீர். தீர்க்கப்படாத நம் தாகத்தினை தூக்கிப்பரக்கு அப்பறவை பாரம் தாங்காமல் அலறும் பொழுது நான் அதை வெறுக்கத் தொடங்கினேன். எப்போதுன் நீ என்னை வழிமொழிவாய் என நம்பியபடி.

நண்ப

ஆணாகிய என்னிடம் ஆணாகிய நீ முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய். முரட்டுத்தனமாக மறுத்தலிக்கிறேன். முத்தங்களுக்கு ஏது பால்பேதமென்கிறாய். அருவெறுப்பின் உச்சமென்கிறேன். புன்னகை புரிகிறாய். உடல் கூசுகிறது நினைத்தாலேவென்கிறேன். உன் பூத்த புன்னகை சிரிப்பாகிறது. உன் உறுதி கண்டு பயந்து விலகியோடுகிறேன் சிரிப்பொலி அடைத்த பாதைகள் விலக்கி. கனவில் நான் உனக்கு இட்ட நீண்ட முத்தத்திற்குப்பின் நான் பெண்ணானேன் நீயும் பெண்ணானாய். பெண்ணாகிய நீ பெண்ணான என்னிடம் முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய். நாணத்துடன் மறுத்தலிக்கிறேன். பால் பேதம் அற்றவை முத்தங்கள். வேப்பமர நிழலில் அமர்ந்து நமதான இவ்வுரையாடலை கேட்டு அவர்கள் சிரித்துக்கொள்கிறார்கள் மற்றவர்களுக்கு தெரியாமல். அவர்கள் முத்தங்களின் வல்லமை அறிந்தவர்கள்.

நண்ப

அவளை எனக்கு பிடித்திருக்கிறது. சலனமற்ற உன் முகம் சலனமற்ற வார்த்தைகளை சலசலவென உதிர்கிறது. குடிநீர் நிரம்பிய பாலித்தீன் பையை சுவற்றில் எரிந்து உடைத்தாய். சுவற்றில் தெறித்த நீரின் கோலத்தில் நெளிந்தது ஒரு அமீபா. அவளுடன் இன்னொரு பெண்ணும் சில ஆண்களும் இருந்தார்கள். நீயும் நானும் கூட. கூரையற்ற அறையின் தரையில் அமர்ந்து மது அருந்தினோம். வாழ்நாளின் அவமானகரமான அன்று நான் செய்தேன். சுவற்றில் பட்டு தெறித்த மது போத்தலின் ஆடிச்சில்லுகள் என் ஞாபகக்கிழிசலின் ஓரங்களைத் தைத்தன. அமர்ந்திருந்தவர்க்கெல்லாம் ஆளுக்கொரு ரணம். ஆனந்தத்திலும் துக்கத்திலும் சில துளிகளை இழந்தது நமது விழிகள். விடியலில் நாம் அவர்களை விட்டு வெளியேறினோம் நீ அருகிலும் நான் வெகுதொலைவிலும். இன்றும் அவளை எனக்கு பிடித்திருக்கிறது. அவளுக்கு உன்னைத்தான் பிடித்திருக்கிறது என தெரிந்த பிறகும்.

நண்ப

அலுப்பு தட்டும் ஒற்றைக் கேலிக் கூத்து என் மரணம் திரும்பத் திரும்ப நிகழ்கிறது மைதூனத்தில். சொல் மொழி துளிவானம் நீர்மை எல்லாம் புதைய நிகழ்கிறது காலம். உன் பெயர் அவள். என் பெயர் அவன். அவன் பெயர் நீ. அவள் பெயர் நான். எழுத்தெல்லாம் ஸ்கலிதம் என்கிறான் கணிதன். மீதம் கிடைத்தது பூச்சியம். சமன்பாடு நிறைவடைந்ததில் பூப்படையும் காமம். கடலின் குறுக்கே பறக்கும் காகம் காவென கத்துவது யோனிதர்மம்.

நண்ப

மௌனம் வேயப்பட்ட அறையில் ஆழ்கடல் அடர்வென மனங்கொண்டு அமர்ந்திருக்கிறேன். உன் பால்வெண்மை வார்த்தைகளில் என்னை வெளியழைக்கிறாய். ஆப்பிளின் நறுமணத்தை சொல்லாக்குகிறாய். பயங்களின் இழையாய் படியும் மனத்தின் மீது செங்கல் செங்கலாய் தைரியம் கட்டுகிறதது. என் சொற்கள் வெளியேற வேண்டிய தருணத்தை நோக்கி எழுகிறது அதன் சுவர். ரோஜாவின் வண்ணத்தையொத்த உன் வார்த்தைகள் செய்கிறது எனதான நம்பிக்கைகளை மீட்க தேவையான அனைத்து மாயங்களையும். வகையறியாத அருட்பாடலைப் போல அவை உன் உதடுகளில் உச்சரிப்பு கொண்டிருக்கிறது. ஊசியிலைத் தாவரத்தில் வடியும் மழைத்துளியாய் உதிர்ந்து சிதறுகிறது எனக்கான பயங்கள். கிடையில் கதறும் ஆடுகளின் ஒர்மையை நான் அடைந்த கணத்தில் இடதுகண்ணைச் சிமிட்டி செல்கிறாய் எனது முன்தலையில் முளைத்த ஒற்றைக்கொம்பின் கூரியமுனை பார்த்து.

நண்ப

என்னிடமிருந்து விலகிச்செல்லும் என்னிடமிருந்தே தொடங்குகிற உரையாடலின் முடிவில் குரோதம் கொள்கிறாய் என்னிடமே. தன் கூட்டுக்கு செருக காக்கைத்தூக்கிச் செல்லும் வடிவமில்லாத சிறுகுச்சி போல என்னை விட்டுவிட்டு என்னை தூக்கிச்செல்கிறாய் உன் கூட்டுக்கு நான் குச்சியாய் இருக்க ஏலாதென தெரிந்தே. உன் சுவாசத்தின் ஒழுங்குமுறைகள் என் சுவாசத்திற்கு எதிரானவைஎன தெரிந்தே நானும் வுன் கூட்டுக்குச்சியாகிறேன். ஆயினும் ஒன்று கேட்க அனுமதி. என்னை நீ எடுத்துச்சென்ற பின் நீ விட்டுச்சென்ற நான் தெருமரமாய் நிற்கிறேன். அதில் உன் கூடை கட்டேன்... நகரமுடியாமல் இருக்கும் என் மீது நீ அமர்வது எனக்கு விருப்பமாய் இருக்கிறது. என்மீது என்னாலான குச்சி கொண்டு நீ கட்டும் கூட்டில் நீ வசிக்க நேர்ந்தால் என்னிடமிருக்கும் சில பழங்களையும் பறவைகள் இரண்டையும் அளித்து மகிழ்வேன்.

நண்ப

நல்லது போய்வா. நான் கேட்டது முடிவுக்கு வந்துவிட்டது. இனி நான் ஒரு நாட்காட்டி மட்டுமே. தினமும் என்னைக் கிழிக்கலாம். கசக்கி குப்பையிலோ மலச் சாக்கடையிலோ போடலாம். வழியும் எச்சிலைத் துடைக்கவோ கைஈரத்தை வழித்தேடுக்கவோ என்னை நீ பயன்படுத்தலாம். அல்லது கிழிக்காமல் விட்டு என்னை கடந்தகாலமாக்கலாம் உன் பழைய ஞாபகங்களின் வழித்துணைக்கு. காலமாவதற்கும் கடந்தகாலமாவதற்கும் என்னைப் பணிய வைத்தவுன் அன்பிற்கு பணிவிடை செய்ய நானுன் தாழ்பணிகிறேன்.

நண்ப

பதிலாக எனக்கு நீ ஒரேயொரு முத்தம் கொடு.

*****************

கள்ளக்காதல்' தொகுப்பிலிருந்து.

*********************

27.2.10

குளம்

தாழ்வாரத்தில் தேங்கும் ஒளிக்குளம் நிலவு கொடுத்தது. எடுத்து முகத்தில் அப்பிக்கொள். வழிகிறது வாசமாய் உன் இனிய சொற்கள். தேகம்கொல் காமம் பிசைந்த சோற்றுப்பருக்கைகளை உருட்டியளிக்கிறாய் நீளும் என் உள்ளங்கையில். வயிற்றிலில்லை பசிஎன்னும் சொல். எல்லாமே வெண்மையாய் தெரிய கறுத்துச்சிறுக்கிறது எனதான அகம். புறம் பேசுகிறது நிலா.

**************

சூரியனின் நீர் நிறைந்த பகலொன்றில் கனப்பு மிக்க நிலத்தில் உன் காலடி தடம். பற்றி செல்கையில் நிறைவடைகிறது தொடுவானம்.

****************

பலவருடங்களுக்கு முன் எழுதிப்பார்த்த காதல் வரிகள்!

*********************

24.2.10

சாயம் போன நிலம் 1

அந்த மண்ணின் தரம் ஏதுவாக இருந்தது தேவையான அளவை சேகரித்துக்கொண்டேன் அந்த இடம் ஏதுவாக இருந்தது தேவையான இடத்தை சுத்தம் செய்து வேலியிட்டேன் அவன் சொன்னான் அந்த இடம் ஏதுவானதென்றுஅங்கு ஓர் ஆழ்துளை செய்து தேவையான நீரைஎடுத்துக்கொண்டேன். அந்த மரம் காய்ந்து போனதுஅதை வெட்டி தேவையான விறகுகளை பத்திரப்படுத்தினேன்தேவையான அளவு இடத்தில்தேவையான அளவு மண்ணைக் கொட்டிதேவையான அளவு நீரை சேர்த்துகுழப்பி பரப்பினேன். உயிர் குடிக்கும் குரல் கொண்டுஒரு நாடோடியின் பாடலை முனுமுனுத்தவாறு நீஅந்த பரப்பில் கீறலிட்டாய். காயவைத்து ஒவ்வொன்றாய் அடுக்கி தேவையான அளவு விறகு வைத்து எரியூடினேன். மண்சுட்டு கல்லானது இப்போது தேவையான அளவு இடமில்லைஇப்போது தேவையான அளவு மண்ணில்லை இப்போது தேவையான அளவு நீரில்லைவேறு இப்போது வேறெங்கோ துளையிட அவன்போய்விட்டான்நாடோடிப்பாடல் நாட்டுப்பாடலானது இனி எப்போதும் தேவையான அளவு கல் இருக்கும் என்னிடம்.
**************
இடைமறித்த பகலொன்றின் துவக்கத்தில் ஒரு கொழுத்த இரவை எனக்கு பரிசளித்தாய் அதன் பாரம் தாங்கமாட்டாமல் என் கால்கள் பூமியுள் புதைகின்றன ஒவ்வொரு கணத்திலும் திரும்ப பெற்றுவிடு அந்த இரவை அல்லது தொடர்ந்து சுமக்க உன் தோள் கொடு அல்லது ஒரு சிறிய இளைப்பாறல் போதும் பார் அந்த சிறுமி என்னிடம் ஒரு காகிதம்
கேட்கிறாள். தெருவெங்கும் மழையோடையாம் கப்பலுக்கு ஏங்குகிறதாம் நீர்
அடர்நினைவினாலான அவ்விரவினை சற்று இறக்கி வைத்துவிட்டு ஒரு காகிதத்தை துலாவி எடுத்துக்கொடுக்கும் நேரத்தை மட்டும் எனக்கு அளி. ஒரு வேளை அவள் செய்யும் கப்பலில் அந்த இரவை சரக்காக்கி காலத்துக்கு ஏற்றுமதி செய்துவிட ஏலுமானால் மறுகணமே உன்னிடம் வருவேன்
ஒரு இனிய மிருதுவான குளிர் வீசும் மிளிர்கரும் இரவொன்றை உனக்கு
பரிசளிக்க.

*************

23.2.10

வினோதம் 4

பாதுகாப்புணர்வு இழக்கும் ஆண்கள் பற்றி முந்தய பதிவில் சொல்லியிருந்தேன். இப்போது நம்பிக்கையுடைய பெண்ணைப்பற்றி கொஞ்சம் யோசிக்கலாம். அதற்கு முன்னாள் இந்த ஆண்களைப்பற்றி நான் சொன்னவைகளை சுருக்கமாக மீண்டுமொருமுறை என் ஞாபகப்படுத்தலுக்காக எழுதுகிறேன்: பொதுவாக ஆண் பணம் மற்றும் பெண் தேவைகள் பூர்த்தியாகாத சமயங்களில் பாதுகாப்புணர்வை இழக்கிறான். இவை இரண்டும் கிடைக்கும் நிலையில் அவன் பெண்ணை நம்ப தொடங்குகிறான். குடும்ப அமைப்பில் இந்த இரண்டுமே ஆணுக்கு ஆதாரம். இதன் அடிப்படையில் ஆணுக்கு எழுவதுதான் அன்பும் காதலும். இதுதான் பெரும்பாலான சரி. பேரன்பும் பெருங்காதலும் கொண்ட வெகுளி/அப்பாவி/முட்டாள் ஆண்கள் இதில் விலக்கானவர்கள், பாவம் அவர்களை விட்டுவிடலாம்! பொதுவாக தனது மொத்த தேவைகளையும் குடும்ப அமைப்பின் மூலம் சுலபமாக தீர்த்துக்கொள்கிற ஆண்கள், தங்களில் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை நுகர்கிற வாடிக்கையாளர்களாக மட்டுமே உள்ளார்கள்.
நம்பிக்கையுடைய பெண் யார்: பிறரை சாராமல் தனியாக வாழ முடியும் என்று ஒரு பெண்ணுக்கு தெரிந்து போனால் மட்டும் போதும் அவள் நம்பிக்கை அடைந்தவளாகிறாள். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் தனியாக சுயமரியாதையுடன் வாழத்தகுதி உடையவள்தான். அது அவளுக்கு தெரியவில்லை என்பது மட்டுமே பிரச்சனை. அவள் சார்ந்தே இருப்பதுதான் நல்லது என்று போதிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறாள். பெண் அடிமைத்தனம் என்பதிலிருந்து விடுபடுதல் என்றால் ஆணை விட்டு விலகிச்செல்லுதல் என்று அர்த்தமில்லை, மாறாக ஆணீயச் சிந்தனைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுதான்.
ஆண் சமுதாயம் பெண்ணை தொடர்ந்து ஒரு 'பாதுகாப்பற்ற உணர்வில்' இருப்பதாக நம்ப வைத்துக்கொண்டிருகிறது. அவளும் அதை முழுமையாக நம்புவதாகவே படுகிறது. சார்பு ஒரு சுய தேவை என்கிற அளவுக்கு அவள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாவே எனக்கு தோன்றுகிறது. உடல்வலு கூட பெண்களுக்குத்தான் அதிகம். பெண்களுக்குஇருப்பது வலுவான திறன், ஆண்களுக்கு இருப்பது வலு. உதாரணத்திற்கு, ஐம்பது கிலோ அரிசி மூட்டையை தூக்கி அடுத்த அறையில் வைப்பது ஆண்களுக்கு சுலபம், மாறாக ஐம்பது துணிகளை உட்கார்ந்த இடத்தில் துவைத்துப்போட அவனுடம்பில் திறன் கிடையாது. விதி விலக்குகள் விலகுங்கள்.
இந்தவையான சுய அறிதலே பெண்களுக்கு நம்பிக்கை என்கிறேன். தான் தனியாக வாழ தேவையான அறிவை பெண் பெற்றுவிட்டால் அவள் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுவாள். குடும்ப அமைப்புகளை சிக்கலின்றிபுரிந்து கொண்டு ஒரு சோலை நீரோடையாக தனது குடும்பத்தை அமைத்துக்கொள்ள அவளால் முடியும். பெருங்காதலும் பேரன்பும் இல்லாத பெண்களை நான் ஆண் என்றே கொள்கிறேன். அவர்களையும் விட்டுவிடலாம் பாவம் அவர்கள். சூழ்நிலை.

தொடரும்..
*****************************

22.2.10

வினோதம் 3

நண்பன் வசுபாரதி 'ஊதாரித்தனமான நண்பன்' என்கிற வார்த்தையை பிரயோகித்திருக்கிறான். சுவாரஷ்யமான கூற்று. அதை பற்றி நான் கொஞ்சம் எழுதுகிறேன். அதற்கு முன்னாள், பத்மாவின் பின்னூட்டத்தில் முட்டாள்தனம் என்று யோசிக்கத்தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார். இதைப்பற்றியும் நான் சொல்லவேண்டி இருக்கிறது. என்னவென்றால், முட்டாள் தனம் என்று நான் சொல்வது அறிவாளித்தனத்துக்கு எதிர்பதமாக. அறிவு எவ்வாறு ஒரு தன்மையோ அதுபோலவே முட்டாள் ஒரு தன்மை. சரியாக நான் சொல்ல வந்தது வெகுளித்தனம் அல்லது அப்பாவித்தனம். இது இரண்டும் சேர்ந்ததுதான் முட்டாள்தனம். இங்கு என்னைப்பொருத்தவரையில் அறிவாளிகளை விட முட்டாள்களே சிறந்தவர்களாகவும் மேன்மை மற்றும் மென்மையான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருக்கிறார்கள். வாழ்வதற்கு தேவையான அடிப்படை அறிவை கொண்டவர் எவரும் அறிவாளிதான். அப்படியானால் இங்கு முட்டாள்கள் யாரும் இல்லை, சமயோசிதமாக பணத்தை எவ்வழியிலும் சேர்க்கத தெரிந்தவர்களைத்தான் இங்கு நாம் அறிவாளிகள் என்கிறோம். முட்டாள்கள் பிழைக்கத்தெரியாதவர்கள். பெரும்பாலும் 'பாவம் அவன்' என்கிற விகுதியோடுதான் அவர்கள் அடையாளப்படுத்தப படுகிறார்கள். இந்த வகையில்தான் என்னை அல்லது என் செயல் பாடுகளை நான் முட்டாள்தனம் என்று விளித்துக் கொள்கிறேன். இது கண்டிப்பாக அவையடக்கம் அல்ல.
இரண்டாவதாய் வசுபாரதியின் ஊதாரித்தனம் என்கிற பதம். ஊதாரித்தனம் என்பது பொதுவாய் கண்டமாதிரி செலவுசெய்தல், பணத்தை சேமிக்காதிருத்தல் போன்ற பொருளாதார பிரச்சனைகளின் அடிப்படையிலான சொல். வசு இதனடிப்படையில் சொல்லியிருந்தால் அது எனக்கு உடன்பாடு கிடையாது. எனக்கும் ஊதாரித்தனம் பிடிக்கும். அனால் அதற்காக ஒரு மனிதன் அடுத்தவரை சார்ந்திருக்கக்கூடாது என்பதுதான் சரி. அதற்காக ஒரு சிறு அளவிலான திட்டமிடல் வாழ்க்கையில் மிகத்தேவையானது. திட்டமிடல் என்ற சொல்லே கொஞ்சம் பொறுப்புணர்வு சார்ந்ததுதான். அவ்வகையான பொறுப்புணர்வையே நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டேன். எனக்கு தெரிந்து அதிகப்படியான குடும்பங்களில் குழந்தைகள் வளர்த்த பின்னும் பெற்றோரை சார்ந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பெற்றோர்கள் பெற்றதனாலேயே தரவும் வேண்டும் என்கிற எண்ணத்தில் வளர்கிறார்கள். குழந்தைகளை நாம் குற்றம் சொல்ல முடியாது. நமது வளர்ப்பு முறையே அவ்வாறாகத்தான் உள்ளது.
என்னைப்பொறுத்தவரை, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கைகளை வளர்க்க உதவ வேண்டும். நம்பிக்கைஎன்றால், அவர்களது வாழ்நாளில் எந்ததினத்திலும் அவர்கள் தனித்து கைவிடப்பட்ட நிலையில் - கையறு நிலையில் - தள்ளப்பட்டாலும் மீண்டும் வாழ்க்கையை முதலிலிருந்து உற்சாகமாக தொடங்கும் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும், அந்த நாள் அவர்களது அறுபதாவது வயதில் ஏற்பட்டாலும் சரி. எளிமையாக சொல்லவேண்டுமானால், ஒருவர் நடுத்தெருவுக்கு (!) வந்தாலும் வாழ்கையை சுவாரஷ்யமாக எதிர்கொள்ளும் திராணியை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அளிக்கவேண்டும். அதைத்தான் பெற்றோர்களுக்கான பொறுப்புணர்வு என்று நான் சொல்லுகிறேன்.
இங்கு நிலைமை அப்படி இல்லை. எந்த பள்ளியின் பாடத்திட்டமும் நம்பிக்கையை முன்னிறுத்துவது இல்லை. குடும்ப நபர்களும் அவ்வாறே. தமிழ்ச்செல்வன் சொன்னது போல இந்த இந்திய தேசமே 'பெயிலாய்ப் போனவர்களின்' தேசம் என்பது தெரியாமல் நாம் பாடப்புத்தகப் பொதிகளை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கிறோம். நமது தேசத்தின் மொத்த வளர்ச்சியில் பள்ளித்தேர்வுகளில் தோல்வியுற்றவர்களின் பங்கு அறுபது சதத்திற்கு குறையாது என்பது கண்கூடு.
இதனடிப்படையில்தான் நான் ஆண் மற்றும் பெண் மனக்கூறுகளால் ஆன குடும்ப அமைப்பில் ஆண்களைப் பற்றியும் பெண்களைப்பற்றியும் நான் புரிந்து வைத்திருப்பவற்றை பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்.
...................................... தொடரும்.
********************

19.2.10

சுயம்

நான் யார். தெரியவில்லை என்று ஒதுங்கி போகாமல் ஏதாவது சொல்லவேண்டும். இது எனக்கு சுயவிருப்பமாக (பர்சனல் அர்ஜ்) உள்ளது. இது ஆன்மீகத்தேடல்தொடர்பான கேள்வி இல்லை. இந்த சமூகச்சூழலில் என் மனம் என்னவிதமாக உருவாக்கி இருக்கிறது என்பது பற்றிய ஒரு சுய விமர்சனம். என் மனநிலை (ஸ்டேட் ஆப் மைன்ட்) என்பதை நான் எவ்வாறு அமைத்துக்கொண்டுள்ளேன் என்கிறது பற்றிய எனது எளிய வாக்குமூலம். இது யாருக்காக என்பதை இறுதியில் சொல்கிறேன்.

நல்லது - கெட்டது :

என்று எதுவும் இல்லை. மனிதர்களின் பழக்கங்கள் அவரவர் சூழ்நிலைகளுக்கு ஒப்ப நல்லவை கெட்டவை என தீர்மானிக்கப்படுகின்றன. புகை, மது, பெண் ( பெண்களுக்கு ஆண்) ஆகியவை பொதுமைப்படுத்தப்பட்ட கெட்டபழக்கங்களாக உள்ளன. இதை நான் திண்ணமாக மறுக்கிறேன். பொய் சொல்லுதல், பொறாமைப்படுதல், திருடுதல், பழிசுமத்துதல், பிறன்மனை விழைதல் போன்ற இன்னும் பலவிதமான பழக்கங்கள் மனிதர்களின் வளர்ப்புச்சூழலில் உருவாகும் மனவியல் பக்குவம் என்பது என் எண்ணம்.

ஆண் - பெண் :

என்பவர்கள் உடல் அடிப்படையில் வேறுபட்டவர்கள். மன அடிப்படையில் வேறுபாடு அற்றவர்கள். மீண்டும் இதற்கு வளர்ப்புச்சூழல் காரணியை நம்புகிறேன். இது அடிப்படை. மாறாக, நான் பல சந்தர்ப்பங்களில் ஆணாக இருப்பதற்காக குற்றவுணர்வு அடைந்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை ஆண் என்பவன் ஒரு மொன்னையான இயற்கை அமைப்பு. ஒற்றைபுரிதல் ஆணின் மன இயல்பு. பெண் பலவித (மல்டிப்பில்) புரிதன்மை அமைப்பு. ஆண் பனைமரம் என்றால் பெண் வாழைமரம். வேறு வேறு வகை. வேறு வேறு இருப்பு. மூளைச்செயல்பாடுகள் மட்டும் ஒன்று.


கடவுள் :

இல்லை. கடவுள் என்கிற கருத்தாக்கம் மட்டுமே இருக்கிறது. கருத்துக்களை நான் ஒருபோதும் நம்புவதில்லை. சில கூட்டு மனங்களின் நம்பிக்கைகள் சில நேரம் பலிக்கிறபோது நிகழ்தகவின் குழந்தையான 'தற்செயலையே' நான் கடவுளென தீர்மானிக்கிறேன்.


நட்பு:

எனக்கு நட்பில் பால்பேதமில்லை. ஒருவரை பிடித்திருந்தால் அவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் நண்பர்தான். கொலைகாரர், திருடர், புரம்சொல்லுபவர், பாலியல் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் என அவர்கள் எவ்வாறு இருந்தாலும் எனக்கு கவலையில்லை. யாரையும் எனக்கு கேவலமாக நினைக்கத்தோன்றாது. பிடிக்கவில்லை என்றால் சுத்தமகாக ஒதுங்கிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். எனக்கு உலகத்தில் அனைவரையும் பிடிக்கும் அரசியல்வாதிகளைத்தவிர.


அரசியல்: கட்சிகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பையும் இதுவரையில் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. இனிமேலும் இல்லை.


கலாச்சாரம்-பண்பாடு: எதுவும் இல்லை. திராவிடன் என்பதில் லேசான பெருமிதமுண்டு.


மதம்: புத்தம் தேவையாக இருக்கிறது. சமணம் விருப்பமாக இருக்கிறது. இசையும் நடனமுமாய் இருந்தால் மகிழ்ச்சி.


மரணம்: என்பது முற்றுப்புள்ளி. எளிய, உறுதியான மருத்துவச்செயலிழப்பு (டெத் இஸ் கிளினிக்கல்). ஆன்மாவையும் மறுபிறப்பையும் திண்ணமாக மறுக்கிறேன்.


அறம்: சுதந்திரம். என் அறம் சுதந்திரம். நான் ஏற்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு கருத்தும் என்னால் சுதந்திரம் என்கிற சிக்கிமுக்கியில் உரசிப்பார்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டவை.


இந்த சுருக்கமான மற்றும் முட்டாள்தனமான வாக்குமூலம் எதற்கு: எனது மன - சிந்தனைப்போக்கு மேற்கண்டவைகளின் அடிப்படையில்தான் இயங்குகிறது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதன் மூலம் எனது இரண்டு மகன்களுக்கும் (அவர்களைப்போலவே ஆன ஆண் சிறுவர்களுக்கும் ) தெளிவுபடுத்தவே. எதிர்வரும் கடுமையான, காழ்ப்புணர்வும், பொறுப்பற்ற தனிமனித மற்றும் சமுதாயச்சூழலும் நிறைந்த காலத்தில் ஆண்களென அவர்கள் நுழைகிறார்கள். அவர்களுக்கு நான், ஆணாகிய நான் எவற்றை சொல்லி அனுப்புவேன் ? எதையும் சொல்ல வேண்டுமாவென்றும தெரியவில்லை. எல்லாக்குழந்தைகளைப்போலவே அவர்கள் ஊடக கற்பிதங்களையும், திரைப்பட நாயகர்களின் பிரதிமைகளையும் , மோசமான பாடத்திட்டங்களின் மத்தியிலும் வளர்கிறார்கள். சகோதர்களுக்குள்ளே குரோதம் பேணுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என் பொறுப்புணர்வின் மேல் கடும் கேள்வி எழுகிறது. வெறும் பொருளாதரத்தை சேமித்து வைத்தால் சரியாகிவிடுமா?


உணவுக்காவும் இருப்பிடத்திற்காவும் பாதுகாப்பிற்காவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி போல வாழும் எனக்கு நிறைய எழுதத்தோன்றுகிறது. மனஅழுத்தம். பிறகு எழுதுகிறேன்.
*********************

16.2.10

தினம்

தாய்மார்கள் தினம் , காதலர் தினம் போன்று ஒரு நாளை ஏதாவது ஒரு தினமாக கொண்டாடுவதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. உலகத்தில் எத்தனை நாட்களை என்னவிதமான தினமாக கொண்டாடுகிறார்கள் என்று கணக்கிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் சங்பரிவாரங்கள் எதிர்க்கிறார்கள் என்கிற ஒரு காரணம் போதும் காதலர் தினத்தை நான் ஆதரிக்க! தமிழ் பண்பாடு போல வேறு எந்த கலாச்சாரத்திலாவது மாதம் ஒரு பண்டிகையை பார்க்க முடியுமாவென தெரியவில்லை. சித்ரா பௌர்ணமியில் ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் ஒரு பண்டிகை நாள்! ஆடி மற்றும் மார்கழியில் மொத்த மாதமுமே கொண்டாட்டங்கள்தான். நான் ஏன் தினத்தை ஒரு ஏதாவது ஒரு உணர்வு நாளாய் கொண்டாட விரும்பவில்லை என்றால், அந்த ஒரு தினத்தை தவிர மற்ற நாட்களில் அந்த உணர்வு பற்றி ஒரு அக்கறை குறைய அதிக வாய்ப்புள்ளது என்பதனால்தான். தினக்கொண்டாட்டங்கள் என்பவை நுகர்வுக்கலாச்சரத்தில் பலியாடுகளாக்கப்படும் மக்களின் சொத்துக்களை பறிக்க ஏற்பாடு செய்யும் வியாபாரத்தந்திரம். சகோதரிகளுக்கு மஞ்சள் புடவை எடுத்துக்கொடுப்பது (இப்போது சிவப்பு புடவை) போன்ற சுவாரசியமான பயங்கரங்கள் போன்றவை இது. எனக்கு மிகவும் எரிச்சல் வரவழைக்கும் தினக்கொண்டாட்டம் எதுவென்றால் அட்சய திருதி

***********
சிவராத்திரி கொண்டாத்தன்று ஜீ தமிழ் ' அலைவரிசை பார்த்தவர்கள் ஒரு அருமையான இசை ஆன்மீகத்தை அனுபவித்திருப்பார்கள். மிகவும் ரசித்தேன். விக்கு வினாயக்கின் கடம் அதில் உச்சம். மற்றபடி மகாசிவராத்திரி என்பது எனக்கு சிறுவயது கிராமத்தில் தோழிகளுடன் சேர்ந்து சினிமா பேர்சொல்லும் விளையாட்டு விளையாடியதும் சொட்டாங்கல் விளையாட்டு விளையாடியதுமான என் பாட்டி வீட்டு திண்ணை ஞாபகம் மட்டுமே. இந்த சினிமா பேர் சொல்லும் விளையாட்டை இப்போது விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. ஒரு எழுத்தை சொன்னால் படம் பேர் சொல்ல வேண்டும். பாட்டும் பாடுவோம். பாட்டுக்கு பாட்டு. சிலோன் ரேடியோ மாதிரி அதுவும் தொலைந்து விட்டது.

விளையாட்டு என்றதும் நான் (நாம்) விளையாடிய விளையாட்டுக்களை எண்ணிப்பார்த்தேன். கிட்டி, ஜெப்பா கல், தட்டை பெண்டில் காத்தாடி செய்வது, சினிமா பிலிம்களை சேகரிப்பது, சிகரட் அட்டைகளை சேமிப்பது, உண்டி வில்லில் கரட்டாண்டி வேட்டை, வெடி தேங்கா போடுவது, டயர் வண்டி, அம்புவில் செய்வது, கள்ளன் போலீஸ், நொண்டி, கம்மாயில் நீச்சலடிக்க போவது, எழந்த மற்றும் வழுக்கப்பழங்களை பறிப்பது, தலைவெட்டி செடி, கோவைக்காய் செடிபோன்றவைகளை தேடிப்போவது, டயரை எரித்து அந்த வெளிச்சத்தில் சோளக்கருது திருடுவது.. இன்னும் என்னென்ன...!!

**************



13.2.10

வெயில் பாலத்தின் குறுக்கில்நீளும் நினைவுக்கத்தி - 2

நீண்ட நாட்களுக்கு பின்சில பருத்திச்செடிகளைப்
பார்த்தேன். வரைமுறையற்ற
காடைமுட்டை அளவில் வெடிக்க
தொடங்கியிருந்தன வெயிலின் வாசனையிலிருந்த
பருத்திப்பூக்கள்.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு
கடலைப் பார்த்தேன். பொங்கும் அலையடங்கி
பருத்தி வண்ண நுரைபெருக்கியது கடல். கை
நிறைய அள்ளி முகர்ந்தேன் தேனடை வாசனை.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு
சூர்ய அஸ்தமனத்தை பார்த்தேன். ஒழுங்கான
வட்டத்தில் நின்று கடலையும் பருத்தியையும்'
சிவப்பாக்கிகொண்டிருந்த குருதிக்குழம்பு
கைகளில் கசிய
கடல் நீரில் கழுவினேன்
பருத்தியில் துடைத்துக்கொண்டேன் கைகளை.

நீண்ட நாட்களுக்கு பின் நான் நடந்த
தரையில் சிறிது காந்தமணலைப்பார்தேன். காந்தமானேன்.
காகிதத்தில் பிடித்த மணலை பிரித்தேன்
வீடாகியிருந்தது மனம் போல .

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மரணம்
பார்த்தேன். காந்த வீட்டிலிருந்து வெளியேறி
கடலில் காலைக்கழுவி
ஒரு பருத்திப்பூவை அதன் மேல் வைத்து
அமைதியாய் நின்றிருந்தேன்
நீண்ட நாட்களுக்கு பின்.

*************

12.2.10

வினோதம் 2

"பாதுகாப்புணர்வு இல்லாத ஆண் பெண்ணை முழுவதுமாய் நம்பிவிடுகிறான். அதே போல, நம்பிக்கையுடைய பெண் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுகிறாள்". - என்று சொல்லியிருந்தேன். இதில் பாதுகாப்பு உணர்வை இழந்த ஆண் என்பதை நான் எப்படி வரையறுக்கிறேன் என்றால், பொருளாதாரம் மற்றும் காமம் இவை இரண்டுமோ அல்லது இவற்றில் எதோ ஒன்றோ ஆணுக்கு தொடர்ந்து கிடைக்காவிட்டாலோ அல்லது கிடைத்துக்கொண்டிருக்கும் சூழல் மாறுகிற நேரம் வரும்போதோ ஆண் பாதுகாப்பு உணர்வை இழக்கிறான். காமம் கிடைக்க எதிர்பால் தேவை, ஆனால் எனக்குத்தெரிந்து ஆணுக்கு பொருளாதார சிக்கல் வரும்போது பெண்ணைத்தான் நம்புகிறான். அதாவது அவனது அடிமனம் அப்படித்தான் இருக்கிறது. ஒரு விட்டேத்தியான கலைஞனிலிருந்து பெரிய தொழிலதிபர்கள் வரை இப்படித்தான் போல.
இவ்வகையான பாதுகாப்பு உணர்வை இழந்த ஆண் ஒரு பெண்ணை முழுவதுமாக நம்புவது அவனிடம் இயல்பாகவே எழுகிறது. அதற்காக சமூக அடிப்படைவிதிகளைக்கூட அவன் பொருட்படுத்துவது இல்லை. ஒரு பெண்ணின் நம்பிக்கையை பெற மண்ணை கூட உண்ணத்தயாராகிறான். தனது அனைத்து தந்திரங்களையும் ஒரு கைதேர்ந்த வேடனைப்போல உபயோகிக்கிறான். இழந்த பாதுகாப்பு உணர்வை மீண்டும் பெறுவதற்காக அதே பெண்ணை கொல்லகூட வேண்டியிருக்கிறது சில நேரங்களில். இதனால் ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து தப்பவே இப்போதைய நம் சமூக குடும்ப அமைப்புகளில் கவனமாக தன்னை இருத்திக்கொள்கிறான்.
அதே நேரம் தனக்குத் தேவையான எதை கொள்ளவும் அவன் குடும்ப அமைப்பிலிருந்து மிக சுலபமாக வெளியேறுகிறான். அவனால் முழுவதும் குடும்பம் தவிர்த்து இயங்க தேவையான அனைத்து இயங்குதளங்களையும் ஆணாதிக்க சமுதாயம் அவனுக்கு அளித்திருக்கிறது. ஒரு புள்ளி கூட மாறாமல் அவனால் தன்னுடைய குடும்ப அமைப்புக்குள் நுழையமுடியும், எந்த கணத்திலும்! (பெருங்காதல், அன்புக்காக எதையும் செய்வேன், நீ இல்லாமல் ஒரு கணம் உயிர் வாழ முடியாது .. போன்ற வசனகர்த்தாக்கள் அறியாமையில் உழலும் பேதைகள் என்பதே என் தாழ்மையான கருத்து, மேலும் இதே போல மத உணர்வுள்ளவர்களும் அவ்வாறானவர்களே).
ஆக, என்னைப்பொருத்தவரையில் ஒரு ஆண் பாதுகாப்பு உணர்வை மீண்டும் பெற ஒரு பெண்ணை நம்பி விடுகிறான். வேறு வழியில்லாமல். காமம் மற்றும் பொருளாதாரம் ஆகிய காரணங்கள் அற்று வேறுவகையான மனோவியல் காரணங்களை நான் இதில் இணைத்துக்கொள்ளவில்லை. சாதாரண பொது வாழ்வில் நடைமுறைகள் என்கிற முட்டாள்தனத்தால் விளையும் விளைவுகளையே நான் பொருட்படுத்தியுள்ளேன்.
இனி பெண்ணின் நம்பிக்கை பற்றிய என் பார்வையை அடுத்த பதிவில் சொல்ல முயல்கிறேன்.

******************

6.2.10

வெயில்பாலத்தின் குறுக்கில் நீளும் நினைவுக்கத்தி - 1

**

ஏனென்றால் அவன் தன்னை
அழைத்துக்கொள்கிறான் தன்னைத்தானே.
தன்னைத்தானே அழைத்துக்கொள்வதற்காக
தன்னை ஆயத்தப்படுத்துகிறான் தினமும்
சிலமணித்துளிகள் அவன் ஆடி முன்பாக
ஒத்திகை செய்துகொள்கிறான். பிறகு இன்று
தீர்மானிக்கிறான். கடற்கரை மணலை அள்ளி
வாயிலிட்டு கண்ணீர் வர இருமித்துப்புகிறான். பின்
அறைக்கு வந்து லாவகமாய் முப்பத்துஏழு
மாத்திரைகளை விழுங்குகிறான்.

**
இரவு முடிந்து பகலில் தெருவோர அரச
மரத்தில் தலைகீழாய் தொங்கிக்கொண்டிருக்கும்
காதலை தாருருண்டை அப்பிய அம்பால்
எய்து பறிக்கிறான். இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு
ஆகபெரும் அடிமை பாவத்துடன் அவன்

வீட்டினுள் நுழைகிறது காதல்.

**

காதல் இருக்கும் வீட்டிற்குள் வேறாரும்
நுழையக்கூடுமோ காமமென்ற ஆமைதவிர.
அவன் தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறான்
வீட்டினுள் நுழைகிறது காமமும் காதலும்
வெட்டப்பட்ட அரசமரம் வெற்றிடத்தில் முளைக்கிறது .
**************

4.2.10

பொறாமை!

நான் எழுதத் தயங்கும் நாவலை ஏறக்குறைய எழுதிக்கொண்டிருக்கிறார் எழுத்தாளர் கரிகாலன்.

படித்து பாருங்கள்: http://chikkymukky.com/

வினோதம்

இன்றைய தினத்தந்தி நாழிதளில் மூன்று விஷயங்கள். ஒன்று, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் என்கிற ஊரில் சுடுகாட்டுக்கு பாதை இல்லை என்பதால் இறந்தது போன நபரின் உடலை காற்றடைத்த லாரி டியூப்பில் பாடை செய்துவைத்து ஆற்றின் மேல் மிதக்க விட்டு சுடுகாட்டுக்கு இழுத்து கொண்டு சென்றிருக்கிறார்கள். பிறகு புதைத்தார்களா இல்லை எரித்தார்களா என்று தெரியவில்லை. தமிழகத்தின் அநேக கிராமங்களில் சுடுகாட்டு பாதைப் பிரச்சனை இருக்கிறது. இதை தொடர்ந்து கிராமங்களில் இருந்து அருகிலிருக்கும் நகரத்தில் மின்மயானத்திற்கு அவசரஊர்தி வைத்து கொண்டுவந்துவிடும் பழக்கம் தொடங்கியிருக்கிறது. ஆனால் இது செலவு பிடிக்கும் சமாச்சாரம். போகிற போக்கில், 'உடல் தானம்' என்கிற விஷயம் புனிதசடங்காகி பிணத்தை அவர்களே வந்து எடுத்துப்போகவேண்டிய கலாச்சார சூழல் உருவாகிவிடும் போல. ஒரு வகையில் அது நல்லதுதானோ என்னவோ.
மற்ற இரண்டும் சினிமா விளம்பரங்கள். ஒன்று 'தமிழ்படம்' என்கிற சினிமா விளம்பரம். தமிழ் சினிமாவின் கேவலங்களை பற்றி படம் பண்ண அமைச்சர் குடும்பத்தில் இருந்துதான் தயாரிப்பாளர்கள் வரவேண்டியிருக்கிறது. அந்த படத்தின் விளம்பர வரிகளில் இயககுனருக்கு தொலைபேசி படத்தின் கதை என்னவென்று கேட்கக்கூடாது "தெரிந்தால் சொல்லமாட்டோமா' என்றிருக்கிறார்கள். நல்ல விளம்பரம்! இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை சினிமா டைட்டிலில் இப்படி ஒரு தொனி வரும் படியான வாசகம் பார்த்த ஞாபகம்.
இரண்டாவது, ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு எம் ஜி ஆர் அடிப்பொடிகள் தோன்றி சினிமா எடுக்க கிளம்பி விடுகிறார்கள். இப்படி 'சின்னவர்' எத்தனை பேர் கிளம்புவார்கள் என்று தெரியவில்லை.இப்படத்தின் இயக்குனர் பெயர் எம் ஜி ஆர்நம்பி! தயாரிப்பு எம் ஜி ஆர் ஸ்டுடியோ ! எம் ஜி ஆர் நம்பியே இப்படத்தில் நடிப்பார் போல. 'கால பைரவி' என்பது படத்தின் பெயர்.


***********************

திருமண பந்தம் பற்றிய எனது அவதானிப்பில் வலு சேர்க்கும் மூன்று காரணங்களை கடந்த மூன்று நாட்களில் நான் அறிய நேர்ந்தது.

மெத்தப்படித்த ஆண், மாதத்திக்கு லட்சம் வரை வருமானம்! மெத்த படித்த பெரிய வேலை பார்க்கிற பெண் என்றால் தனது குடும்பத்தை புரிந்து கொண்டு நடக்கமாட்டார்கள் என்று கற்பனை செய்து, பத்தாவது படித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்..மிகக்குறைந்த காலத்திலேயே மனிதர் திருமணபந்தத்தில் கடுமையான சோர்வு கொண்டுள்ளார். இருவரும் மாறி மாறி 'அவர் புரிந்துகொள்ளவில்லை' என்கிற பதத்தை உபயோகிக்கிறார்கள். இதில் ஆண் நம்பிக்கை இழக்கிறார். பெண் பாதுகாப்பு உணர்வை இழக்கிறார்.

எதிர்மாறாக இன்னொரு நண்பர் திருமணமாகாதவர் திருமணமாகி ஏறக்குறைய பத்துவருடங்கள் லௌகீக அனுபவம் பெற்ற பெண்ணை திருமணம் செய்கிறார். இதில் இருவரும் மாறி மாறி 'அவர் புரிந்துகொண்டிருக்கிறார்' என்கிற பதத்தை உபயோகிக்கிறார்கள். இதில் ஆண் நம்பிக்கை பெறுகிறார். பெண் பாதுகாப்பு உணர்வு அடைகிறார்.

அடுத்ததாக பத்தொன்பது வயது பெண்ண நாற்பத்தியேழு வயது திருமணமான, தினமும் குடிக்கிற ஆணை விரும்பி திருமணம் செய்துகொள்கிறார். காதல் என்று சொல்லமுடியவில்லை. ஏனென்றால் அவர் தினமும் குடிக்கிறார் என்று காரணம் காட்டி பத்து வருடத்திற்கு பின் தனது மகனுடன் தனியாக வாழ்கிறார்.

மூன்று ஜோடிகளுக்கும் பொருளாதார பிரச்சனைகள் இம்மி கூட இல்லை. எனது கேள்வி என்னவென்றால்: ஆணால் பெறப்படும் நம்பிக்கை என்பது என்ன, அந்த நம்பிக்கை எதனடிப்படையில் ஆனது? பெண்ணால் பெறப்படும் பாதுகாப்பு உணர்வு என்பது எது, அந்த உணர்வு எதனடிப்படையில் ஆனது?

நான் என்ன சொல்லுகிறேன்: பாதுகாப்புணர்வு இல்லாத ஆண் பெண்ணை முழுவதுமாய் நம்பிவிடுகிறான். அதே போல, நம்பிக்கையுடைய பெண் ஆணிடம் பாதுகாப்புணர்வை அடைந்து விடுகிறாள். அல்லது சுத்தமான காதலால் எதிர்பால் எக்கேடு கெட்டாலும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்காக (காதல் என்கிற கற்பனைக்காக) தங்களை தாங்களே துன்புறுத்திக் கொள்கிறார்கள்.

நான் சொல்வது சரியா?

இது தொடர்பாக தொடர்ந்து எழுதுகிறேன்.

*******************