31.3.10

சொல்லுவதெல்லாம் பொய் 9

கணம் ஒன்றின் சாத்தியப்பாடுகள் என்னென்ன.

அநேக நேரங்களில் ஜாதககாரனாகவும் பூர்வத்தில் கதைசொல்லியாகவும் இருக்கும் அவன் இன்றயதினத்தில் பங்குனி உத்திரமாம் பௌர்ணமியில் பால் பொழியும் நிலா பார்க்க மிதிவண்டியில் சாலை கடக்கும்போது வகையறியாத வாகனத்தில் அடிபட்டு சாலையோரம் வீசப்பட்டான். அவனுக்கு நினைவு தப்பும் கணத்துக்கு முன்: அப்பா.. பேய்களுக்கு தப்புவித்து கைப்பிடித்து குளம் கடத்தி வீடு சேர்த்துவிடு என்னை.. என்கிற பின்னி மோஸசின் கவிதை வரிகளும் சில துளிகள் கண்ணீரும் உணர்ந்தான். குருதி அவன் சிரசில் வழிய அவன் கோமாவில் எழுந்தான்.

********************************

நான் மாந்தரநாட்டுக்கு நுழைந்தபோது பங்குனி இருபத்தியோராம் நாள். மன்னன் அத்துவன் உடம்பில் பொட்டு புண்ணில்லாமல் மூக்குப்பீளை நோய் தாக்கி மாண்ட தினத்தில் என் வருகை இருந்தது. மேழ ஓரை கார்த்திகை நாளில் பங்குனி பதினைந்து தினத்துள் உச்சமைடையும் உத்தர மீன். அந்த உத்தரம் கீழ் சாய எதிர்மேல் எழும் பின் எட்டாம் மீன் மூலம். மூலம் எழ முன் எட்டாம் மீன் மிருகசீரி துறை தாழும். அக்கணத்தில் எரிந்து கருகும் பெருமீன் ஒன்று கிழக்கோ வடக்கோ நகராது நிலத்தில் பெருவெளிச்சம் காட்டி வீழும். வீழ்த்த ஏழாம் நாள் அத்துவன் மரணிக்க, நான் நகர் நுழைந்தேன்.

மன்னனின் ஈமத்தில் கலக்க நேரிட்டது ஊழ்சாபம். குடநீரும் குடிப்பூவும் கொண்டுசெல்லும் வரிசையில் நான் என்னை நுழைத்துக்கொண்டேன். தீப்பந்தங்கள் வெளிச்சம் காட்ட இரண்டு பெரும் வேப்பமரங்களின் நடுவில் அவர்கள் கூடியிருந்தார்கள். அரண்மனை வாசிகள். தோற்றம் பொழிவு கலைந்திருந்தது. தீப்பந்த வெளிச்சம் எழுசூரியனின் மெல்லிய வண்ணத்தில் அடர் இருளில் பரவியிருந்தது. ஒரு சிறு பெண்டிற்கூட்டம் மரத்தடியில் ஒரு பொழிவான பெண்ணை சுற்றி நின்றிருந்தது. அவளது பொழிவு அவளது இருப்பிலேயே தெரிந்தது. மஞ்சள் துகிலில் அவளுடம்பு சுற்றப்பட்டிருந்தது. சூரியனிடம் பெறும் வெளிச்சத்தை பிரதிபலிக்கும் மஞ்சள் திங்கள். முகம் காணமுடியவில்லை எனக்கு. ஆண்களின் கூட்டம் சற்று பரபரப்பானது. தொலைவில் இருந்த குரும்பனையுயர சுவர்களில் சீரான இடைவெளியில் தீப்பந்தங்களுடன் ஆட்கள் நின்றிருந்தார்கள். இருட்டுக்குள்ளிருந்து ஒரு காத்திரமான சங்கொலி எழுந்தது. கட்டிலில் கிடந்த அத்துவன் உடலைச்சுற்றி அவர்கள் நின்றார்கள். தோள் அகன்ற கருத்த வீரனொருவன் இடைக்கச்சையில் தொங்கிய வாளை உருவி மிகப்பணிவான உடலசைவுகளுடன் அந்த உடம்பின் மார்பில் குறுக்காக நீண்ட ஒரு கிழிப்பை செய்தான். இடது மார்பிலிருந்து வலது வயிற்றிக்கு கீழ் வரை தோல் பிளந்தது. குருதிக்கசிவு இல்லாத அந்த பிளவில் வெண்மையான உட்தோல் தெரியவும் சுற்றியிருந்தவர்கள் முகத்தில் ஒருவித சிலிர்ப்பு தோன்றியதாகப் பட்டது எனக்கு. பின் சடங்குகள் விரைவாக நடந்தேறின. நான் இருளும் வெளிச்சமும் ஒன்று கூடும் கணத்தில் நல்லினியின் முகத்தைப்பார்த்தேன். நல்லினி. அத்துவனின் மனைவி. பட்டத்து அரசி. மாந்தர நாடு அவள் வசம். பிள்ளைப் பேரற்றவள்.

கணமற்றதொரு கணம். குளத்திற்குள்ளிருந்து வெளியேறும் குறுமுனிச்சூலி அப்பாவின் அதட்டலுக்கு அடங்கிப்போனது.

உழிஞை கொண்டுவாடா என்றதட்டும் குரல் என்னை நோக்கி வந்தது. அவள் என் கையிலிருந்த பூக்களை வாங்கி மன்னனின் உடம்பு நோக்கி நடந்தாள். அவள் பார்வை என் விழியை தொட்டு மீண்டது. துலக்கமில்லை. துக்கமில்லை. வெற்றுப்பார்வை. புதரிருளில் ஒதுங்கினேன். தொடைக்குக் கீழ் கெண்டை சதை நடுங்கியது. அரை நாழிகையில் தீப்பந்தத்துடன் அருகில் வந்து நல்ல வெளிச்சத்தில் என் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு கடுமையான சிரிப்பை மற்றவர் அறியாமல் உதிர்த்த கூடலூர்கிழாரை முதன்முதலில் பார்த்தேன். மொத்த உடம்பும் நடுங்குவதை உணர்ந்தேன்.

***************************

தொடரும்.

1 கருத்து: