26.3.10

பச்சையிலை.

பால்யம். அடைகாக்கும் காக்கைச்சூட்டில் வெளியேறும் குயில். நிராதரவான பகலுக்கும் நிர்பந்தமற்ற இரவுக்கும் இடையில் அது கூவுகிறது. திறக்கிறது உயிர். அதன் மரத்தில் காற்றுக்கு நடுங்குகிறது இளம்பச்சை இலை. உதிரும் போது காற்றில் நடுங்குகிறது இலை. வீழ்ந்த நதியில் இலையை நடுங்கச் செய்கிறது ஓடும் நீர். மழையில் துவளும் போதும் நீரில் அமிழும்போதும் நடுக்கமடங்குகிற இலையில் முதிர்கிறது பச்சை.

நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் மணிக்கட்டில் வைத்து வித்தைக்காட்டும் அண்ணனின் விரல்கள் பார்த்து வியக்கிறாள். அடர்வெளிச்சத்தில் விரிகிறது கண்கள். காணாமல் போன பந்துக்கான அழுகையை மறந்து வைக்கிறாள். உருட்டி கொடுத்த சோற்றை கையில் வாங்கி மீண்டும் தட்டில் வைத்து பந்து கேட்டு அழத்தொடங்கும் தங்கையின் அறிவை வியக்கிறான்.

தாத்தாவிடம் தான் தனது முதல் நடையை செய்து காண்பித்தான் தம்பி. வாரியணைத்த தாத்தாவிடம் மீண்டும் நடக்கவிடுவென சொல்லி பூரிக்கிறாள் பாட்டி. தெருப் பெண்களை மாட்டுவண்டியில் அமர்த்தி மாட்டுகாரவேலனைப் பார்க்க போன தாத்தாவின் உருமாளில் சொக்கிய பாட்டிக்கு பதினாலாவது பேரன் தம்பி. எளிமையாய் கடந்தது அவர்களின் மரணம் துளி கண்ணீரில்லாமல்.

ஊதாப்பூ மொக்கவிழ்வது போல விரிகிறது. உதிர்கிறது அந்தியில். அதன் மணம் நீர் தின்ற புழுதியின் வண்ணம். நின்ற மழை பெய்யும் பொருட்டு நிமிர்கிற நேரத்தில் சருகான இலையின் பச்சையில் கூடியிருக்கிறது கருமை. பால்யம்.

**********************

நூறாவது பதிவு. அய்யோடா..!

**********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக