10.3.10

மித்ர..........

****************

ஒரு துயர்கொண்ட முரட்டுப்பாடல் தனதான ஒலிச்சமிக்கைகளை ஒளித்துவைக்க சதா முயல்கிறது. தன்னிடமிருந்து தெரியாமல் வெளியேறும் கூர்ப்பல் ரீங்காரங்களை அது கட்டுப்படுத்த முயன்றும் சதா தோற்கிறது. தனது ஒலிகளின் கூர்முனைகள் கேட்பவர்களின் செவிப்பறையை கிழித்துவிடுமென எல்லோரிடமும் எச்சரிக்கை விடுகிறது. அதன்பொருட்டே அக்கூரிய ஒலிகளில் ஏற்படும் ரணத்தை தானே ஏற்றுக்கொள்வதாக சமாதானம் செய்கிறது. எனக்கு அந்த துயர்கொண்ட பாடல் பார்க்கக் கிடைக்கிறது. அது என்னை நிர்வாணம் ஆக்குகிறது. வெளியெல்லாம் என்னை கூசி அலையச்செயகிறது. அது என் பெருவிருப்பமாய் வேறு இருக்கிறது. தன்னை துயர்கொண்ட பாடலாய் உருவகிக்கும் அது உண்மையில் ஒரு நீண்ட நதி. ஏற்கனவே சமைக்கப்பட்ட பாதையில் நிதானம் தவறாமல் ஓடி கடலைடையும் ஒரு அமைப்பு. ஆனாலும் அது ஒவ்வொரு முறையும் ஒரு எளிய கூலாங்கல்லில் இடறி தனது சமனை இழக்கிறது. இடறி விழும் ஒவ்வொரு முறையும் அது தன்னை துயருற்ற பாடலாக உருவகிக்கிறது. எப்பொழுதும் போல் நான் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்கிறேன். இம்முறை சற்று திகைப்படைந்துள்ளேன்.

*************

3 கருத்துகள்:

  1. அதெப்படி உங்கள் எழுத்து மட்டும் எங்கோ ஒரு தாக்கத்தை உண்டாக்குகிறது?வாசிப்போரும் செய்வதறியாமல் திகைத்துத்தான் நிற்கிறோம் .அது தான் உங்கள் சொற்களின் வெற்றி

    பதிலளிநீக்கு
  2. ஆதிர...
    நம்புங்கள்
    எல்லாவற்றிற்கும் இழப்பை முன்வைக்கும் ஓர் எளிய ஆத்மாவை..

    நம்புங்கள்
    துரோகத்தின் நீள அகலம் நீங்கள்தானென்று...

    நம்புங்கள்
    நாம் தான் வாழமுடியாது வாழ்பவர்களென்று

    நம்புங்கள்
    நாம்தான் ஒருமுறை இறக்க
    பலமுறை கொலைசெய்தவர்ளென்று

    நம்புங்கள்
    நாம் நாம்தான் என்பதையும்
    அந்த நாம்
    வன்முறைதானென்பதையும்

    கைகளை இறுகக் கட்டியபடி
    செய்வதறியா புன்னகையுடன்
    நண்பர்களே
    நாம்
    இப்போது தெளிவாகக் காண்பது...

    வார்த்தைக்கும்
    மௌனத்திற்கும் இடையில் ஓடும் கண்ணுக்குத்தெரியா
    நமதற்ற
    காலநதியில் பெருந்தொடை விரித்து
    நாம்
    சிறு
    நீர் கழிப்பதை.

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கைக்கு உட்பட்டதுதான் சந்தேகமும். படர்கையில் நின்று பார்க்கும்போது தோன்றியது. எழுதினேன். துரோகத்தின் நான்கு பரிமாணங்களில் நீள அகலம் தவிர ஆழமும் காலமும் நானே. உனக்கு இழப்பதற்கு ஏதேனும் ஒன்று இருக்கும் வரை துரோகம் என்று நீ நம்பும் ஒன்று உனக்கும் உன் நிழலுக்கும் இடையில் ஒட்டிக்கொண்டிருக்கும். என் அன்பும்.

    சீரியஸ் போதும்டா சாமி. எல்லாம் நல்லபடியா இருந்தா சரி :-)))))))

    பதிலளிநீக்கு