6.2.10

வெயில்பாலத்தின் குறுக்கில் நீளும் நினைவுக்கத்தி - 1

**

ஏனென்றால் அவன் தன்னை
அழைத்துக்கொள்கிறான் தன்னைத்தானே.
தன்னைத்தானே அழைத்துக்கொள்வதற்காக
தன்னை ஆயத்தப்படுத்துகிறான் தினமும்
சிலமணித்துளிகள் அவன் ஆடி முன்பாக
ஒத்திகை செய்துகொள்கிறான். பிறகு இன்று
தீர்மானிக்கிறான். கடற்கரை மணலை அள்ளி
வாயிலிட்டு கண்ணீர் வர இருமித்துப்புகிறான். பின்
அறைக்கு வந்து லாவகமாய் முப்பத்துஏழு
மாத்திரைகளை விழுங்குகிறான்.

**
இரவு முடிந்து பகலில் தெருவோர அரச
மரத்தில் தலைகீழாய் தொங்கிக்கொண்டிருக்கும்
காதலை தாருருண்டை அப்பிய அம்பால்
எய்து பறிக்கிறான். இடுப்பில் துண்டைக்கட்டிக்கொண்டு
ஆகபெரும் அடிமை பாவத்துடன் அவன்

வீட்டினுள் நுழைகிறது காதல்.

**

காதல் இருக்கும் வீட்டிற்குள் வேறாரும்
நுழையக்கூடுமோ காமமென்ற ஆமைதவிர.
அவன் தன்னைத்தானே அழைத்துக்கொள்கிறான்
வீட்டினுள் நுழைகிறது காமமும் காதலும்
வெட்டப்பட்ட அரசமரம் வெற்றிடத்தில் முளைக்கிறது .
**************

1 கருத்து:

  1. வெட்டப்பட்ட அரசமரம் வெற்றிடத்தில் முளைக்கிறது .

    இந்த வரி மனதிலிருந்து மறைய நாள் ஆகும்.
    simply superb

    padma

    பதிலளிநீக்கு