17.5.10

புதியதளம்

எனது பதிவு தள பெயரை மாற்றியுள்ளேன். தொடர்ந்து எனது பதிவுகளை வாசிக்க கீழே குறிப்பிட்டுள்ள இணைப்பை பயன்படுத்தியோ அல்லது நேரடியாக தளப்பெயரை தட்டச்சு செய்தோ எனது தளத்திற்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். நன்றி.

http://theethumnanrum.blogspot.com/

***********************************************************************************

5.5.10

அற்றவை நிரம்பிய தேகம்

கற்றவை கரையும் கானுறை ஞானம்
சற்றவை மறைய களிபெறும் மோனம்
மற்றவை தேடிடா மதிவானின் போதம்
அற்றவை நிறைந்திட்ட அந்தியின் நாதம்

முற்றவை விலகிடா முற்றத்து வானம்
சிற்றவை அடங்கிடா கருமுகிழ் தானம்
கூற்றவை முற்றிடா குறுந்தமிழ் பானம்
கொற்றவை என்றொரு காடேகும் மௌனம் - திக்

கற்றவை நிரம்பிய விசும்பிடை வாசம்
பெற்றவை யாவிலும் தண்பனி வீசும்
உற்றவை பற்றிய ஊனுயிர் தாகம் - அமிழ்து
மற்றவை நிரம்பிய கலயமுன் தேகம்.

*******************

1.5.10

சித்திரைப் பௌர்ணமி




சித்திரைப் பௌர்ணமி. இம்மாதம் எனது மொபைல் கேமராவில் எடுத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரையில் பௌர்ணமியை பார்ப்பது எனக்கு பிரார்த்தனை. இம்முறை கடுமையான வேலைப்பளுவுன் இடையில் கிடைத்த நேரத்தில் எடுத்தது. இடம் திருச்சி பொன்மலை அருகில்.
இந்த படம் தொடர்பாகவும் கவிதை எழுத நண்பர்களை அழைக்கிறேன்.
...................................

ஒளிரும் மரம்

கால்பரீட்சை ஒரு பாவச்செயல்.
அரைப்பரீட்சை ஒரு பெருங்குற்றம்.
முழுப்பரீச்சை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
.

மாணவர்களின் கற்பனைக்கு ஒரு தலைவணக்கம். இதை ஒரு மாணவனின் தமிழ் புத்தகத்தில் பார்த்தேன்! தீண்டாமை என்னும் வார்த்தயை பென்சிலால் அழித்து மேலே எழுதியிருக்கிறான். பார்த்தது நாலைந்து வருடமிருக்கும். முதல் தடவை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பும் சிரிப்பும் இன்னும் மாறவில்லை. ஒரு அசட்டு சிரிப்பும் வெட்கமுமாய் அந்த புத்தகத்தை வாங்கி பைக்குள் திணித்துக்கொண்டான் அந்த ஆறாவது வகுப்புக்கு போகப்போகும் மாணவன். இந்த வருடமும் பரிட்சை முடிந்து கோடை விடுமுறையை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் மாணவக்கண்மணிகள். என்னனென்ன செய்வார்கள் என்று பார்த்தால் பெரும் பரிதாபமே மிஞ்சுகிறது. அவர்களின் அறுபது சதநேரத்தை தொலைகாட்சி கொன்றுவிடும். முட்டாள்தனத்தின் உச்சமான சம்மர் கோச்சிங் சில பல நூறுகளைக் கொல்லும். எல்லோருக்கும் வாய்க்காது இன்பச்சுற்றுலா. உறவினர் வீட்டுக்கோ கிராமத்து சூழலுக்கோ செல்லும் பழக்கம் அருகி விட்டது. என் பையன்கள் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது போரடிக்குது என்கிற வார்த்தையை பிரயோகிக்கிறார்கள். மனம் பயந்து தவிக்கிறது. அவர்கள் விரும்பும் ஒவ்வொரு பொழுதுபோக்கு முறையும் பெரும் செலவின வகைகளாய் இருக்கிறது. மக்கள் அவற்றைப்பற்றி பெரிதாக அக்கறைப்படவும் செய்வதில்லை. செலவு குறைவான உருப்படியான பொழுதுபோக்குகளை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள். குழந்தைகளின் வயதுக்கு தக்கவாறு. நான் பரிதுரைக்கும் ஒரே பொழுதுபோக்கு நம் தொன்மைக்கதைகளை சொல்லியும் நடித்துக்காட்டும் பழக்கத்தை உருவாக்குவதும். நடனம் நல்லதுதான். ஆனால் சினிமா பாடல்களுக்கு அல்ல.


******************
இடிமின்னல்களுடன் கலைகட்டுகிறது கோடைமழை. இப்படி வெயிலில் பெய்யும் மழைக்கு காத்திரமான மண்வாசனையுண்டு. மேலும் இதன் மாலை நேர மேகம் அற்புதத்திலும் அற்புதமானவை. அநேக நேரங்களில் வெள்ளிச்சாம்பல் வண்ணத்தில் மின்னிப்பரவும். அதன் பின்புலத்தில் வெட்டும் மின்னல் நமக்கு கடவுளை காட்டும் அளவு வெளிச்சம் அளிக்கும். நின்று பெய்யும் மழையும் அதன் சத்தமும் மாலை மின்னலும் நம் பால்யத்தின் மிக நுணுக்கமான சுருள்களை விரிக்க வல்லவை.

*****************************

மின்மினிப்பூச்சிகளின் ஒளி திரவத்தை மரங்களில் செலுத்துவதின் மூலம் ஒளிரும் மரங்களை உருவாக்கலாம் என்றும் தெருவிளக்கு கம்பங்களை அகற்றி தெருவிளக்கு மரங்கள் ஏற்படுத்தலாமென்கிற சாத்தியப்பாடுகளை திட்ட வரைவில் நிரூபித்த திருச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தெருவெல்லாம் ஒளிரும் மரம் என்கிற அற்புத படிமத்தை கவிதையாக்க சிவகுமாரை அழைக்கிறேன். குட்டையாய் இல்லாமல் நீண்ட கவிதையாய் வந்தால் நன்று. மற்றவர்களும் முயலலாம்.

***********************

26.4.10

படத்தொகுப்பு


பத்து படங்கள் என்றால் எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை. எனவே நான் எனது சினிமா காலத்தை மூன்றாக பிரிக்கிறேன்.

எனது மிக அழகான கிராமமான வடபுதுப்பட்டி தேனி மாவட்டம் மேற்குமலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இன்று அதன் மொத்த அடையாளமும் நகரிய நசுக்களால் அழிந்து போனாலும் எனது மூளையில் அதன் பழைய வரைபடங்கள் எனக்கு பொங்குமின்ப நினைவலைகளை உருவாக்குபவை. அந்த ஊரில் எனக்கு திரைப்படம் பார்க்க கிடைத்த அரங்கம் மூன்று. சரஸ்வதி, வீரக்குமார், ஆர்த்தி. முதல் சரஸ்வதியின் முதலாளி யாரென ஞாபகம் இல்லை. மற்ற இரண்டுக்கும் முத்து நாயக்கன் முதலாளி. சரஸ்வதியை இழுத்து மூடிய பின் வீரகுமார் வந்தது. வீரக்குமார் பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆர்த்தி ஆனது. ஆக ஏக காலத்தில் எங்கள் ஊரில் ஒரே டூரிங் டாக்கீஸ் தான். இவை அனைத்தும் தொண்ணூறுகளில் முடிவுக்கு வந்தன. இப்போது வடபுதுபடியில் திரையரங்கு இல்லை. பக்கத்து டவுன் தேனியிலோ வடக்கில் பெரியகுளத்திலோ பொய் படம் பார்க்க வேண்டும். போதும் தம்பட்டம். இனி படங்களின் பெயர் தொகுப்புகள்.

புரட்சிதலைவனின் இரண்டு படங்களை சொல்லி தொடங்கலாம். மலைக்கள்ளன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன். பொய்முடி இல்லாத அழகு தல புரட்சித்தல. சிவாஜியின் ராஜா மற்றும் கௌரவம். ஜெமினியின் வாழ்க்கைபடகு, வல்லவனுக்கு வல்லவன் - ஜெமினி வில்லனாக வருவார்! உத்தரவின்றி உள்ளே வாவும் சட்டம் என் கையில் எனும் படமும் நினைவில் இருக்கிறது. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமனியும் ஜெகன்மொகினியும் மறக்க ஏலாதவை. மிகவும் ரசித்துப்பார்த்த எம் ஜி ஆர் படம் ஒன்று எவ்வளவு யோசித்தாலும் பெயர் வரவில்லை. அதில் வரும் வில்லன் ஒரு பின் நவ்வீனத்துவ திருடனாய் நடிப்பார். இதில் இறுதியாக வீரக்குமாரின் முதல் நாள் படமான வருவான் வடிவேலன்!

இரண்டாவது கட்டமாக சில படங்கள்: கண்களை பொத்திக்கொண்டே முழுப்படத்தையும் பார்த்தேன்.. இல்லை கேட்டேன் - நூறாவது நாள்! அதில் வரும் உருகுதே இதயமே என்கிற பாடலை நீண்ட நாட்களாய் கேட்கப்பயந்து கொண்டிருந்தேன். மூன்று முடிச்சு - க்யூட் ஸ்ரீதேவி, தாமரைநெஞ்சம்-சரோஜாதேவி, டிக் டிக் டிக், இன்று போய் நாளை வா, இணைந்த கைகள், சிவப்புமல்லி, ஒருதலை ராகம், அவள் அப்படித்தான், முள்ளும் மலரும்.

மூன்றாவது பாகம்: முதல் மரியாதை, காதலுக்கு மரியாதை, தேவர்மகன், பாட்ஷா, வாலி, கேளடி கண்மணி, புலன் விசாரணை, காதல், எங்க சின்ன ராசா
கடைசியாக நான் பாடும் பாடல்.

ஒரு வழியா எழுதிட்டேன். இவை எல்லாம் இப்போ பிடித்த படங்களா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஆனால் இப்படங்களைப் பார்த்த நாட்களில் இவை எனக்கு மிகுந்த மன சிலாக்கியத்தை உண்டு பண்ணியவை.
எல்லாவற்றையும் தாண்டி எனக்கு ஒரு சிறப்பு படம் உண்டு அது எந்த பட்டியலிலும் இணைக்க முடியாதது - ரத்தக் கண்ணீர்.

போதுமா பத்மா!
*****************************