7.12.09

அஞ்சலி

மரணவீடேகாதவன்
துர்மரணங்கள் துரத்த
களித்துத் திரிந்த எம் குருத்துக்கள்
சிறு கடுகெனத் தெறித்துக் கலைந்த காலமது
காய்ந்த மூங்கில் சடசடவென முறிய
வேய்ந்த சருகுதிர்ந்து காற்றலைந்து செல்ல
தெறித்த விழிகளில் பிதுங்கிய துர்க்கனவுகள் தொற்றாதிருக்க
பதுங்கிப் பிழைத்த பாதகன்
கடுகுப் பொதி சுமந்தலைகிறேன்.

***************

துரத்தும் நினைவுகளை என்ன செய்வது. மிலன் குந்தேராவின் தலைப்பு: Unbearable Lightness of Being . . நண்பணின் துர்மரணம் நேற்று. வாகனவிபத்து. எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன். கவுண்டமணியின் காமெடி நினைவுக்கு வந்து தொலைக்கிறது. தண்ணி கிண்ணி/பொம்பள கிம்பள/பீடி சிகரெட்/ கொறஞ்சது வெத்தலபாக்கு.. எதுவும் இல்லை. அவன் செய்தது: முப்பது வயதுவரை ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது.. கர்த்தருக்கு விசுவாசமாய் இருந்தது.. உருப்படியான காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்தது..

முப்பத்தி ஒன்பது வயதில் அரசு பேருந்தில் அடிபட்டு இறந்து போனான்.

டிசெம்பர் ஆறாம் தேதி.

*******

வளர்மதியின் மேற்குறிப்பிட்ட கவிதை உள்ளுக்குள் கரைந்தழும் எனக்காக எழுதப்பட்டது போல உணர்கிறேன்.

1 கருத்து:

  1. நண்பனின் இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அளிக்க ஆண்டவரைப் பிரார்த்திக்கிறேன். சமீபத்தில் இதே போன்று ஒரு உறவினரை மின்சார ரெயிலில் அடிபட்டு இழந்த வகையில் நாங்களும் அதே போல இழப்புக்கு ஆளானோம்.

    பதிலளிநீக்கு